பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவரும் மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் வழங்கிய

அணிந்துரை

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" எனத் தமிழின் இனிமைச் சிறப்பைப் புகழ்ந்து பாடினான் பாரதி. 'தமிழ் இனிய மொழி மட்டுமல்ல ஆற்றல்மிகு அறிவியல் மொழியுமாகும்' எனப் போற்றிப் புகழ்வதோடு அமையாது, தம் கடும் முயற்சியாலும் செயல்பாடுகளாலும் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக "தமிழ் ஒர் அறிவியல் மொழி" என்பதை வெறும் சொற்களால் அல்லாமல் செயல் வடிவில் காண்பித்து வருகிறார் திரு. மணவை முஸ்தபா அவர்கள்

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவில, கால வகையினானே"

என்ற பொருள் பொதிந்த பழம்பாடலுக்கிணங்க இன்றைய காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்ப முதன்மைத் தமிழ்ப் பணியாக திரு. மணவையார் தேர்ந்தெடுத்திருப்பது 'அறிவியல் கலைச் செயலாக்கப் பணி' ஆகும். 1996 இல் வெளியிடப்பட்ட 'மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்' எனும் நூலினை 48,686 கலைச் சொற்களாக விரிவாக்கி விளக்கம் தந்து புதிய வடிவில் 1200 பக்கங்களைக் கொண்டு "மருத்துவக் களஞ்சியப் பேரகராதி" உருவாக்கியுள்ளார் திரு. மணவை முஸ்தபா அவர்கள்.

உருவாக்கம் பெறும் கலைச் சொற்களை வெறும் பட்டியலாக அமைக்காமல் அவற்றை ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்க் கலைச்சொல், சொல் விளக்கம், பொருள் விளக்கங்களை படங்களோடு, பட விளக்கங் களோடும் வெளியிடுவதன் மூலம் அகராதித் தன்மையையும் களஞ்சியப் போக்கையும் ஒருங்கிணைத்து 'களஞ்சிய அகராதி' எனும் புதுவகை அமைப்பில் உருவாக்கியிருப்பது எல்லா வகையிலும் பாராட்டத்தக்க புது முயற்சியாகும்.