பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மருத்துவ விஞ்ஞானிகள்


கொண்டு சோதனைக் கூடம் வந்து, மைக்ரோஸ்கோப் கருவி மூலம் அக் காற்றை ஆராய்ந்தார் என்ன முடிவு தெரியுமா?.

சில கண்ணாடிக் குழாய்க் காற்றில் நுண்ணுயிர்களே இல்லை என்பதைக் கண்ட பின்பு, லூயி எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெற்றார். இந்த ஆய்வுகளிலே இருந்து அவர் கண்ட கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? இதோ அந்த வெற்றி முடிவு.

“உயிரற்றவைகளில் இருந்து நுண்ணுயிர்களோ - உயிர்களோ, தோன்றுவதில்லை. ஏற்கனவே இருக்கும் நுண்ணுயிர்களில் இருந்தே புதிய நுண்ணுயிர்கள் தோன்று கின்றன. முன்பு இல்லாமலே திடீரென்று தாமாகவே நுண்ணுயிர் கள் தோன்றுவது என்பது தவறு. காற்றில் நுண்ணுயிர்கள் கலந்திருக்கின்றன என்பதே உண்மை” என்று எதிர்வாதம் செய்த அறிவியல் நிபுணர்களுக்கும், படித்த சில கல்விமான்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்தார் போன்ற தனது ஆய்வு உண்மையால் ஓங்கியடித்தார்.

எந்தெந்த விஞ்ஞானிகள் தனது கருத்தை ஆரம்பத்தில் நம் மறுத்து, விதண்டா வாதம் செய்து வந்தார்களோ, அவர்கள் எல்லாம்; இப்போது லூயி பாஸ்டியரின் ஆய்வுண்மையைக் கண்டு ஊமைகளைப்போல இருந்து விட்டார்கள்.

அந்த விஞ்ஞானிகளை எல்லாம் லூயி அழைத்து, சோதனை அரங்கத்திலே தனது ஆய்வுகளைச் செய்துகாட்டி நிரூபித்தார். இதனால் அந்த அறிவியலார்கள் மேலும் மெளனி களானார்கள்.

அதற்கு அடுத்து, பாரிஸ் நகரத்திலிருக்கும் சார்போன் பல்கலைக் கழகத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அமைச்சர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகை நிருபர்கள், எழுத்தாளர்கள், பாரிஸ் நகரப் பிரமுகர்கள் எல்லாரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த மிகப்பெரிய கூட்டத்தில், லூயி பாஸ்டியர் தான் செய்த ஆராய்ச்சிக் கருவிகளையும் - அதற்குரிய கண்ணாடிக் குழாய்கள் பொருட்களையும், அவற்றுள் நிரப்பப்பட்ட காற்றின்