பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மருத்துவ விஞ்ஞானிகள்



புகழ் பெருகப் பெருக, பணம் சேரச் சேர, சிலருக்கு மன கர்வம் உருவாவது உண்டு. ஆனால், ஹார்விக்கு அடக்கம்தான் தலை சிறந்து ஓங்கியது. மருத்துவர்களுக்கு மிகச் சிறந்த அடக்கம், ஒழுக்கம், பிறரை மதிக்கும் மனம்; அறிவின் தெளிவு எல்லாமே ஒன்றிணைந்து இருப்பவரால் தானே சிறந்த மருத்துவராகத் தோன்ற முடியும்? அவை எல்லாமேல அவரிடம் பொருந்தி இருந்தது.

மனித இதயம் ஆராய்ச்சியை எழுதிய நூலோடு மட்டுமல்லாமல், அறுவை மூலமும் அதை நிருபித்துக் காட்டிய ஹார்வி, ஏறக்குறைய நாற்பது விலங்குகளின் இதயங்களையும் அறுத்து - ஆராய்ந்து - சோதித்த பிறகே, அவற்றைத் தனது அச்சு நூல்களுள் பதிவு செய்தார்.

விலங்குகளை அறுத்துப் பார்த்ததோடு மன நிம்மதி பெறாமல், புழுக்கள், பூச்சிகள், சிப்பிகள் போன்றவற்றையும் பிடித்து வரச் செய்து அவற்றையும் ஹார்வி அறுத்துச் சோதனை செய்து பார்த்தார்.

வில்லியம் ஹார்வி அன்று துவங்கிய இதய ஆராய்ச்சி, இந்த இருபதாம், இருபத்தோறாம் நூற்றாண்டிலும் கூட, அவருடைய வழிகாட்டுதல்களையே பின்பற்றி வெற்றி பெற்று வரும், மருத்துவ மேதைகளையும் நாம் இன்றும் கண்டு கொண்டுதான் வருகின்றோம். ஆனால், அன்று?

அரைப் பைத்தியன்! கிறுக்கன்!!

நமக்குத் தெரியாத கருத்தைத் தெரிந்து கூற இவன் யார்? அதனால், அந்தக் கருத்துக்களை ஏலோம் என்ற எண்ணமுடைய அழுக்காறு, அலட்சிய, ஆணவப் பிறவிகள் அதிகம் பேர் இருந்த காலம் அது? அதனால், ஹார்வி கருத்துக்களை நேரிடையாகப் பார்த்தவர்களும், கேட்டவர்களும் ஏகடியம் செய்தவர்களும் “அவரை, அரைப் பைத்திய மருத்துவன் இவன்” என்று பிரச்சாரம் செய்தார்கள்.