பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

39




ஜோசப் லிஸ்டர் இங்கிலாந்து நாட்டில் உள்ள அப்டோன் என்ற நகரில் 1827-ஆம் ஆண்டில் ஏப்ரல் 5-ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தையின் பெயர் ஜோசப் சாக்சன் லிஸ்டர். அவரது நான்காவது செல்வன் நாம் போற்றும் ஜோசப் லிஸ்டர்.

ஜோசப் லிஸ்டரின் தந்தையான ஜோசப் சாக்சன் லிஸ்டர் சிறந்த, புகழ் பெற்ற மருத்துவ விஞ்ஞானி. இவர்தான் நுண்பெருக்கி ஆடிகள் என்பனவற்றைக் கண்டுபிடித்தவர். தனது தந்தை புகழ் வாய்ந்த விஞ்ஞானியாக இருந்ததால், ஜோசப் லிஸ்டருக்கும் வாழையடி வாழையென வந்த விஞ்ஞானிகள் கூட்டத்திலே தானும் ஒருவனாகச் சிறந்து விளங்க விரும்பினார்.

ஆனால், ஜோசப் லிஸ்டருடைய குடும்பம் மதக் கோட்பாடுகள் என்ற சிறைச் சுவர்க்குள் சிக்கிவிட்டக் குடும்பம். லிஸ்டரும் அவரது உடன் பிறப்புகளும், பரந்த மதக் கட்டுப் பாட்டுடனும், மத பாசத்துடனும் வளர்க்கப்பட்டவர்கள் ஆவர்.

கர்த்தர் இயேசு கிறிஸ்துக் கடவுளால், வாழ்க்கை அருட்கொடையாக வழங்கப்பட்ட வரம் என்றே கருதி ஒழுகிய குடும்பம் - லிஸ்டரின் குடும்பம். ஆனால், கடவுளுக்கும் அவரை வழிபடும் அடியார்களுக்கும் தொண்டு செய்வது ஒன்றே இறை பேறு என்று இளம் பருவம் முதலே நம்பி வளர்ந்த கிறித்துவ ஆன்மீகக் குடும்பம் அது.

இந்தப் பழக்க வழக்கம் தொட்டிலில் இருந்தே பண்பாடாக வளர்ந்ததால், மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதே மனிதப் பிறவியின் மாண்பு என கருதி, மக்களது இன்ப - துன்பங்களிலே சரி சம பங்கேற்று வாழ்ந்து வந்தக் குடும்பத்தினர். ஆதலால், அதே பழக்க வழக்கங்கள் கல்லறை வரை தொடர்ந்து, அதற்கேற்பவே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

தந்தை ஜோசப் சாக்சன் லிஸ்டர், தனது மக்களுக்குரிய அனைத்து வசதிகளையும் ஒழுங்காகச் செய்து கொடுத்தார். பள்ளியில் படிக்கும்போதே லிஸ்டர் விலங்குகள் தோல்களை உரித்து அவற்றை ஆய்வு செய்து பார்க்கும் அக்கறை கொண்டவர்.