பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மருத்துவ விஞ்ஞானிகள்


அதைக் கேட்டுக் கொண்ட ரோஸ், கொசுக்களை அடித்துக் கொல்லும் பாவத்தை நான் சுமந்துக் கொள்கிறேன் என்று கூறியபடியே, அவன் எதிரிலேயே கொசுக்களைத் தனது கைகளால் தட்டித்தட்டிக் கொன்றார், விரட்டிக் கொண்டே இருந்தார் ரோஸ்.

மறுபடியும் அதே வேலையாள், “கொசுக்களை அழிப்பது இயற்கையை நாம் அழிப்பதற்குச் சமம். இயற்கை கொடுக்கும் துன்பங்களைப் பொறுப்பது நமது கடமை” என்றான்.

ரோஸ் பெருங்கோபம் கொண்டார். “மனிதனைத் துங்கவிடாமல் தொல்லைகளைத் தரும் கொசுக்கள், மூட்டைப் பூச்சிகள் முதலியவற்றை அழித்துத்தான் ஆக வேண்டும். உன்னைப் போன்ற முட்டாள்களை நான் கண்டதில்லை. போ, உனது மற்ற வேலைகளைப் போய் கவனி” என்று கூறிய ரோஸ், கொசுக்களை அடித்துக் கொண்டே இருந்தார்! ஓசைகள் கேட்டன; ஒன்றிரண்டு கொசுக்களும் அடிபட்டு தரையில் வீழ்ந்தன.

கொசுவை அழிப்பது எப்படி?

அடித்து அடித்து ஓய்ந்து போன கைகளோடு ரோஸ், சற்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். எவ்வளவு நேரத்துக்கு இப்படி அடித்துக் கொண்டே இருப்பது? இரவு முழுவதுமா? உறக்கம் கெட்டா? என்றவாறு கொசுக்களை ஒழித்துக்கட்ட என்ன வழி என்று சிந்திக்க ஆரம்பித்தார்!

எப்படி இந்தக் கொசுக்கள் தோன்றுகின்றன? எங்கிருந்து உற்பத்தியாகின்றன? அந்தக் கொசுக்கள் மக்களைக் கடிப்பதால் வருகின்ற தீமைகள் எவை? கொசுக்களில் எத்தனை வகை இருக்கின்றன? அவை ஒன்றா? பலவா? என்றெல்லாம் ஆராயத் துவங்கினார் ரோஸ்!

கொசுக் கூட்டத்தை அடித்து விரட்டிக் கொண்டிருந்த ரோஸ், இப்போது அந்தக் கொசுக்களை ‘சார்வர்’ கொடுத்து வளர்க்க ஆரம்பித்துவிட்டார். இந்த எண்ணம் ரோசுக்கு வந்ததின் காரணமே, அவருடைய நெடு நாட்கள் சிந்தனையால்தான்!