பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் ட91

நன்கொடை பணத்தைக் கொடுப்பார். பெற்றுக் கொண்டு இன்று மாலைக்குள் பேரையூர் கண்மாய்க்கரையில் உள்ள மடத்திற்கு வந்து சேருங்கள். நாங்கள் இப்படியே வேம்பாறு சென்று விட்டு திரும்புகிறோம்."

"என்ன புரிகிறதா?”

"உத்தரவு ஐயா!......... செவ்வல்பட்டியில் நாயக்கர் பணம் வசூலித்துக் கொடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" அந்தத் தோழர்களில் ஒருவர் கேட்டார். "செவ்வல்பட்டி ராமசாமிநாயக்கரும் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அவரது ஊர் மக்களும் நமது போராட்டத்திற்கு மிகவும் ஆதரவாக இருப்பவர்கள். நேற்று இரவு ஊர்க்கூட்டம் போட்டு ஊர் மக்களிடம் நமக்கு உதவுவது பற்றி தெரிவித்து இருப்பார். ஆதலால் சுணக்கம் ஏற்படாது. ஒருவேளை சுணங்கினால் நீங்கள் பேரையூர் வந்துவிடுங்கள். அடுத்தவாரம் செவ்வல்பட்டி சென்று அவரைச் சந்தித்துக் கொள்ளலாம்".

மயிலப்பன் பதில் கூறிவிட்டு அவரும், அவரது நான்கு தோழர்களும் கிழக்கு நோக்கி வேம்பாறு புறப்பட்டனர்.

வேம்பாறு கிராமத்திற்குச் செல்லும் வழியில் சித்திரங்குடி சேர்வைக்காரரும், அவரது தோழர்களும் சென்று கொண்டு இருந்தனர். தலைக்கு மேலே சூரியன் காய்ந்து கொண்டிருந்தான். வழியில் உள்ள தேரியின் மணல் பரப்பில் ஆழமாக அழுந்திய குளம்புகளை வேகமாக எடுத்து வைக்க இயலாமல் அவர்களது குதிரைகள் திணறியவாறு நடந்து கொண்டிருந்தன.

அவர்கள் வேம்பாறு கிராமத்தை அடைந்தபொழுது முற்பகல் நேரம் முடிந்து கொண்டிருந்தது.