6
கொங்கு நாட்டினைப் பற்றிய கட்டுரையை நூலின் முதல் பகுதியாக அமைத்துள்ளேன். மிகப் பழங் காலந்தொட்டே கொங்குநாடு தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக நின்று, அதே வேளையில் தனக்கெனத் தனியாக வளர்த்துக்கொண்ட சிறப்பியல்புகளோடு, விளங்குகின்றது. அதன் வரலாற்றையும் அங்கு வாழும் மக்கள் வாழ்வின் அடிப்படைகளையும் அம்முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்.
ஏறக்குறைய நாற்பது நாட்கள் பல இடங்களில் சுற்றி உழன்றேன். எனது ஆய்வுக்கு அரசாங்கத்தின் பல துறைகளையும் நாடினேன். ஏனோ அரசாங்கப் பொறுப்பேற்றுள்ள பெரும்பணியாளர்கள் என் வேண்டுகோளை ஏற்கவில்லை. கோடை விடுமுறையில் என் பணி முடியவேண்டும் என்ற வேண்டுகோளுடன் அனுப்பிய எனது விண்ணப்பத்திற்கு, அக்கோடை விடுமுறை கழித்து ‘இயலாது’ என்ற பதில் தமிழக அரசாங்க அதிகாரியிடமிருந்து பெற்றேன். இப்படியே சென்ற இடங்களிலும் சிற்சில அதிகாரிகள் ‘பொது மக்கள் வாழ்வுக்காகத்தாம்’ என்பதை மறந்த காரணத்தால் அடிப்படை உதவியும் செய்ய விரும்பவில்லை. எனினும் அங்கங்கே உள்ள எனது நண்பர்களும் அவ்வவ்விடங்களில் வாழும் பொதுமக்களும் எனக்கு ஊக்கமுட்டி வேண்டிய வகைகளிலெல்லாம் உதவி செய்தனர். சென்றவிடங்களிலெல்லாம் உணவும் சிற்றுண்டியும் தங்க இடமும் அளித்த அறிமுகமல்லாத அச் சிறுசிறு குடிகளில் வாழும் மக்களின் செயலை எண்ணும்போது ‘வள்ளுவர் காட்டிய பண்பாடு’ தமிழ்நாட்டில் இன்னும் வற்றிவிடவில்லை என்று உணர்ந்தேன். சென்றவிடங்களிலெல்லாம் எனக்கு உண்டான, பட்டறிவு பற்றிக் ‘கண்டதும் கருத்தும்’ என்ற தலைப்பிலே விளக்கியுள்ளேன்.
கொங்குநாட்டில் எத்தனையோ வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அனைவருடைய வாழ்வின் அடிப்-