உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மாஜி கடவுள்கள்


பேகஸ் தேவனுடைய ‘பிரபாவ’ விளக்கக் கதைகள் இதுபோல் பலப்பல உண்டு.

ஒருமுறை இந்தத் தேவன் கடலோரத்திலே படுத்துறங்கும்போது, சிலர் கட்டித் தூக்கிக், கப்பலில்போட்டு, எகிப்து நாட்டிலே கொண்டு சென்று அடிமையாக விற்றுவிட முனைந்தனராம். கடலில் கலம் செல்லும்போது பேகஸ் கண் விழித்துக்கொண்டார். காதகர்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். தன்னை நாக்சாஸ் தீவிலேவிட்டு விடும்படி—அவர்கள் இணங்கவில்லை. உடனே, பேகசின் கோபம் சாபமாகி, கலம் கடலில் அசைவற்று நின்றுவிட்டது. புதிய புதிய பாய்மரங்களை அமைக்கிறார்கள்—கப்பல் அசையவில்லை. பேகசின் சக்தியின் முன் சாமான்யர்களான மனித சக்தி என்ன செய்யமுடியும்! கலங்கினர்—கடைசியில், தன்னைச் சிறை பிடிக்கத் துணிந்த செருக்கர்களை மீன்களாகி விடும்படி சாபமிட்டுவிட்டார்.

பேகசின் காதல் விளையாட்டுக் கதைகளும் புராணீகன் தந்தான்.

மற்றக் கடவுள்களுக்கு இருந்துவந்தது போலவே இந்த மதுதேவனுக்கும், மக்கள் மன்றத்திலே செல்வாக்கு இருக்கத்தான் செய்தது. கோயில்கள் உண்டு! கொண்டாட்டங்கள் பலப்பல. எல்லாம் இருந்தது பாமரர் ஏமாளிகளாக இருந்தவரையில்! பாடுபடுபவன் பணத்தைப் பகற்கொள்ளைக்காரன் பக்தி என்ற பெயர் கூறிப் பறித்திடும் பாதகச் செயல், ‘ஆத்திகம்’ என்ற பெயருடன் இருந்த வரையில். பிறகோ! முழு முதற் கடவுள் ஜூவசின் கதிதான், அவருடைய காதற் கனியாம் பேகசுக்கும்—மாஜியானான்.