உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

மாஜி கடவுள்கள்


உருவமும் தோன்றிற்று. அந்த உருவம், பிரம்மாண்டமான ஓர் பசு!

பசுவின் பெயர், ஆதும்லா. உறைந்த பனி மீது கடவுளின் ஆணைப்படி கதிர்கள்பட, அது உருக, உருகாத பகுதியினின்றும் உருப்பெற்றெழுந்த ஆதும்லா எனும் பசுவைக் கண்டான் யெமர். வியப்புற்றான்! முதல் உருவம் இரண்டாவதாக எழுந்த உருவம் கண்டு, இது யாது? என்று ஆச்சரியப்பட்டு, அருகே சென்றது, தள்ளாடிக் கொண்டு! பசுவைச் சுற்றிலும், மூடுபனிப் படலம். அருகே சென்று பார்க்கும்போது, ஆதும்லாவின் மடிக் காம்புகளிலிருந்து, பால் வழிந்துகொண்டிருக்கக் கண்டான். நாலு வெண்ணிற ஆறுகள் பெருக்கெடுத்தோடுவது போல, வழிந்துகொண்டிருந்த பாலை, பேரசுரன், பருகலானான். பசி தீருமளவு பருகினான், மயங்கிக் கீழே சாயுமளவு பருகினான்! சாய்ந்தான், உறங்கினான்.

பால் கொடுத்த பேரசுரனை ரட்சித்த பசுவுக்குப் பசி பிறந்துவிட்டது. புல்லும் பூண்டுமற்ற இடம். பசு கலங்கிற்று.

பக்கத்திலே இருந்த ஒரு பனிப் பாறையை நாவினால் தடவித்தடவிப் பார்த்தது—அலுத்தது—பசி தீரவில்லை.

பசுவுக்குப் பசி தீரவில்லையே தவிர, அதன் நாவின் தடவுதல் பயன் தராது போகவில்லை. பனிப்பாறையின் ஊடே இருந்து ஏதோ உருவம் தெரியலாயிற்று. மூன்று நாட்களுக்குப் பிறகு, பசுவின் நா, பட்ட பாறை, கரைந்தது, முதல் தேவன் தோன்றினான். அவன் அழகன். பெயர் ப்யூர்.

பிறகு, இருண்ட பகுதியிலிருந்து, யெமர் போன்றவர்களும், ஒளிப் பகுதியிலிருந்து ப்யூர் போன்றவர்களும்,