உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மாஜி கடவுள்கள்


டியாமட்டால் தூண்டிவிடப்பட்ட கிங்கு, பாம்பு மனிதன், தேள் மனிதன், பறவை மனிதன், என்பன போன்ற பதினோரு வகையான—ராட்சதர்களை உண்டாக்கினான்! மேலும், கிங்குவின் மார்பகத்திலே, டியாமட் தேவி, விதிப் பலகையைப் பதித்துவிட்டாள்! அதாவது, கடவுள்களின் விதியையும் நிர்ணயிக்கும் சக்தி, கிங்குவுக்குக் கிடைத்துவிட்டது. இதை அறிந்த ஈயா தேவன், கோவெனக் கதறினான், பலநாட்கள். வந்ததே விபத்து! வழி தெரியக் காணோமே!—என்று புலம்பினான், வல்லமை மிக்க ஈயா தேவன்!

இதற்கு என்ன செய்வது என்று கலந்தாலோசிக்க ஈயா தேவன், அன்ஷார் தேவனிடம் சென்றான். “ஆமடா மகனே! ஆபத்துதான்—தாங்கமுடியாத ஆபத்துதான். இதற்கு என் செய்வது” என்று கூறி, அன்ஷார் தேவனும் அழுதுவிட்டு, பிறகு தன் மைந்தன் அனு தேவனை அழைத்து, “மகனே! கோபமிகுதியால் நம்மைக் கூண்டோடு அழித்துவிடக் கிளம்பியுள்ள டியாமட் தேவியிடம் சென்று, சமரசம் பேசி, நமக்கு வர இருக்கும் அழிவைத் தடுத்திடுவாய்” என்று வேண்ட, அனுதேவன், தந்தை சொல்லைத் தலைமேற்கொண்டு, சென்றான். ஆனால், டியாமட் தேவியை நெருங்க முடியவில்லை—பிறகு, அதே திருப்பணிக்கு ஈயா தேவன் சென்றான்–பலன் இல்லை–பீதியுடன் திரும்பிவிட்டான்.

யோசித்தான் அன்ஷார் தேவன். யோசனை உதித்தது. உடனே ஈயா தேவனுடைய திருக்குமாரன் மெரோடாக் என்பானை அழைத்து, இந்தக் காரியத்தைச் செய்யும்படி கேட்டான். நமது புராணம் சிலவற்றிலே, சிவனுக்கு இல்லாத சக்தி முருகனுக்கு உண்டு என்று குறிக்கப்பட்டிருப்பதுபோல, இந்த பாபிலோன் கதை.