உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முதல் வாயிற்படி புகுந்ததும், அழகியின் கிரீடம் பறிக்கப்பட்டது. இரண்டாம் வாசலில், காதணி போயிற்று, மூன்றாம் வாசலில் கழுத்தணி போயிற்று, நான்காம் வாயலில் நகை பல போயின, ஐந்தாம் வாயலில் இடுப்பணி பறித்தனர்—இவ்வளவுக்கும் அவள் சினம் கொள்ளவில்லை; இந்தச் சீரழிவுகள் ஏன் என்று வருந்தவுமில்லை, ‘செல்! செல்! என் காதலன் இருக்குமிடம் அழைத்துச் செல்!’ என்றே கூவினாள். ஆறாம் வாயலில் அந்த ஆரணங்கின் ஆடையும் பறிக்கப்பட்டது. தோகையின் துகிலுரியப்பட்டது. ‘ஏனோ இச்செயல்?’ என்று கேட்டாள். ‘என் செய்வேன், ஏந்திழையே! எமது அரசி அலாட்டூவின் ஆக்கினை இது’ என்றான் காவலன்.

துகிலுரிந்த துச்சாதனி

வாயில் காப்போய்! வாயில் காப்போய்! வருவாய் விரைந்து, கதவு திறக்க. காதலன் உள்ளான், கடுகித் திறவாய்! காண்பேன் அவனை, கதவு திறமினோ! திறந்திட மறுத்தால், இருந்திடேன் வாளா! தூள் தூளாகும் தெரிவாய் கதவும். தொடர்ந்து உடைப்பேன் தொல் கதவெல்லாம், வாயில் காப்போய்! வருக விரைந்தே! இறந்தோரை எழுப்பி, இருப்போர் மீதேவி இல்லாதொழித்திடுவேன், இதை நீ அறிக! இருப்போர் சிறுதொகை, இறந்தோர் மிகுதி. எனவே, உடனே, திற நீ கதவு”