202
மாஜி கடவுள்கள்
காதலனைக் காணாது, எங்கெங்கோ தேடி அலுத்து, உடல் இளைத்து, உளம் பதைத்துப்போன காரிகை, அறிந்தாள் அவன் இருக்குமிடம். அங்கு கட்டு உண்டு, கடுவிஷக்கண்ணருண்டு, கதவுகள் பல உண்டு, காட்டு முறைகளுண்டு, என்று கேள்விப்பட்டாள்—ஆனால் காதலன் அங்குளான் என்பதறிந்ததும், இவை எலாம் மறந்தாள், ஏகினாள் கடுகி, தாளிடப்பட்ட கதவு கண்டாள், தடதடவெனத் தட்டி நின்றாள், திறந்திட யாரும் வராதது கண்டு, காரிகை கூவி நின்றாள்,
“வாயில் காப்போய்! வாயில் காப்போய்!
வருவாய் விரைந்து கதவு திறக்க” என்று.
இவ்வளவு போதும், இங்குள்ள கலாரசிகர்களுக்கு—படித்துப் படித்து, ரசித்து, ரசித்து, பதங்களைப் பிரித்துப் பிரித்து, பொருள் உரைத்துப், பூரித்துப் போவர், கேட்போர் பூரிக்காவிடினுங்கூட.
காதலியைத் தேடி ஓடிடும் காதலனைப் பற்றியே கேள்விப்பட்டுள்ளோம்; இஃதோ புதுமை, அருமை, காதலனைத் தேடி அலைகிறாள் காதலி! காடுமேடு மட்டுமோ? அல்ல! அல்ல! இருக்குமிடம் தெரியும்வரை தேடித் திரிகிறாள். கண்டாள் இடத்தை—கொண்டாள் வேட்கை—விண்டாள் தன் விரகத்தை கவிதா சக்தியுடன். கவிதை அறிவாளோ அக்காரிகை என்று கேளாதீர்! காதலில் மலர்வது கவிதை! அப்பூங்கொடியோ, காதலின் உருவம்—காதலே, அவள்—என்றெல்லாம், கூறிக் களிப்பர்.
கதையோ, இந்த ரசத்தோடு முடிந்துவிடவில்லை—வளருகிறது.