உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மாஜி கடவுள்கள்


விண்ணுலகாதிபதியாக நுவாடா தேவன் கொலுவீற்றிருந்தபோது, ஒரு அசுரக் கூட்டம் கடவுட் கூட்டத்தைத் தாக்கிற்று—கடவுளின் கரம் துண்டிக்கப்பட்டுவிட்டது!

ஆமாமய்யா, கடவுளின் கரம்தான்! சிரிக்கிறீர்களா!! இவ்வளவு பைத்யக்காரத்தனமான கருத்தா, பிரிட்டனிலே இருந்தது என்று எண்ணும்போது கைகொட்டிச் சிரிக்கத்தான் தோன்றும்! பிரிட்டனிலே இந்தப் பைத்யக்காரத்தனமான கதை பகவத் புராணம், முன்பு, மூடுபனி போல குருட்டறிவு இருந்த நாட்களில், இன்றல்ல! இந்தப் பைத்யக்காரத்தனத்தை அந்த நாட்டு மக்கள் விட்டொழித்து, பலப்பல நூற்றாண்டுகளாகிவிட்டன. நாம்? துடுக்குத்தனமாக நடந்துகொண்ட பிரமதேவனுடைய சிரத்தைச் சிவபெருமான் கிள்ளிய கதையை—கதை என்று கூறுவதுகூடப் பாபம், என்று இன்றும் சொல்கிறோம்! கபாலி! என்று அர்ச்சிக்கிறோம். பாடுகிறோம் இந்த சிரமறுத்த செயலைப் புகழ்ந்து. பக்தர்கள், கடவுளின் செயலா இது என்று கேட்பவனை, கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கிவிடுவர்! பிரிட்டன், குப்பைமேட்டுக்கு அனுப்பிவிட்டது கரமிழந்த கடவுள் கதையை!! நாம், சிரமிழந்த பிரமன் கதையை, நம்புபவரே ஆத்தீகர் என்று கூறும் மேதைகளை உலவவிட்டிருக்கிறோம்.

நம்நாட்டுப் பாமரருக்கு இன்னும் உள்ள பித்தம், அந்த நாட்களிலே பிரிட்டனில் பாமரருக்கு இருந்தபோது, கட்டிவிடப்பட்ட கதை, நுவாடா தேவன், அசுரருடன் போரிட்டபோது, கரமிழந்தான் என்பது.

கரமிழந்த கடவுளுக்கு, மருத்துவக் கடவுள், உடனே வெள்ளியாலான விசித்திரமான கரத்தைத் தந்தான்!