கரமிழந்த கடவுள்
255
எங்ஙனம் தித்திக்கும் தேனேடுகளை விட்டொழிக்க முடியும் என்று உருகும் கலாவாணர்களும் இங்கு இன்றும் உள்ளனர்.
பிரிட்டனிலும் அயரிலும், பிரான்சிலும் ஸ்பெயினிலும், இத்தகைய ரசம் தேடிகள் இல்லாமலில்லை! எனினும் அவர்களால் அறிவின் வேகத்தைத் தடுக்கவோ, வளர்ச்சியைக் கெடுக்கவோ முடியவில்லை. ‘ரசம்’ நிரம்பிய கடவுட் கதைகள் அங்கெலாமும் இருக்கத்தான் செய்தன. கனவில் கண்ட காரிகைக்காகக் காதல் கொண்டு, உருகி உடல் கருகி உள்ளீரல் பற்றி எரிவது அவியாது என் செய்வேன் என்று ஏங்கிய கடவுட் கதைகூடத்தான் உண்டு. காயாத கானகத்தில் நின்றுலாவிய காரிகையைக் கண்டு, புல் மேயாத மான் வந்ததுண்டா, அதைத் தேடி வந்தேனே வள்ளிமானே என்று பாடிய முருகன் கதை போன்ற கடவுளரின் காதல் விளையாட்டுக் கதைகளும்தான் அங்கெலாம் இருந்தன. விரகதாபத்தால் உடல் கருகிய தேவன், புதுப்புது மலர்களை நாடிச் சென்று காதல் தேனை மொண்டு உண்டு களித்த கடவுள், காதலுக்காகப் பெரும் போரில் ஈடுபட்ட கடவுள், எனப் பலப்பல கடவுளர்கள், மக்களின் மனதிலே இடம் பெற்றுத்தான் இருந்தனர், மதி துலங்கும் வரையில்!
காட்டுமிராண்டிகளிடம் மட்டுமே காணப்படும் நடவடிக்கைகளை, அந்த நாட்களிலே. கடவுட் கதைகளிலே காணலாம்—மக்கள் அந்த நாட்களிலே, இப்படிப்பட்ட இழி செயலையா கடவுளர் செய்வர், என்று எண்ணினதில்லை, எண்ணுவதே பெரும்பாபம் என்றான் பூஜாரி! கடவுளருக்கு, இதுதான் முறை இது முறையல்ல என்று ஒரு நியதி உண்டா, கேவலம் மனிதப் பிறவிகள்போலவா, கடவுளரைக் கட்டுப்படுத்த முடியும் என்றான் பூஜாரி! ‘ஆமாமாம்!’ என்றனர் பாமரர்.