உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

மாஜி கடவுள்கள்


காதல் விளையாட்டுடன், கடவுளர் காமக் களியாட்டத்திலே ஈடுபட்டனர்—அம்மட்டோடு விடவில்லை—பெண்களைக் களவாடினர்—பிறன் மனைவியைக் கற்பழித்தனர்—சிறை வைத்தனர்—எனினும் தேவப் பதவியை இழக்கவுமில்லை; மக்களின் பூஜையையும் பெறாமலில்லை.

அங்கஸ் தேவன், தன் உடன்பிறந்தானான் மைடர் தேவன் மனையாட்டியான எடெயின் தேவியைக் களவாடிச் சென்று, கண்ணாடிப் பெட்டி ஒன்றிலே சிறை வைத்தான்—செல்லுமிடமெல்லாம் இந்த ‘சிங்காரச் சிறை’யை எடுத்துச் செல்வான்—மைடர் மீண்டும் மனையாட்டியை அழைத்துக் கொள்ளாதபடி தடுக்க. சிறைப்பட்ட சிங்காரியும், “அவர் இல்லாவிட்டால் இவர்” என்ற பெருநோக்கம் கொண்ட பெருமாட்டி போலும்! எனவே, அங்கஸ் தேவனின் இன்பவல்லியாகிவிட்டாள். அக்ரமம் செய்த அங்கஸ் தேவனை மற்றக் கடவுளர் தண்டித்தனரோ! இல்லை!! போர் மூண்டதோ? அதுவும் இல்லை. அங்கஸ் தேவன் பாபகாரியம் செய்தவன் என்பதால் அவனைப் பூஜிப்பது கூடாது என்று பூஜாரி கூறினானோ? இல்லை! வழக்கம் போல, அங்கஸ் கடவுளர்களிலே ஒருவனாகத்தான் இருந்து வந்தான்.

மனைவியைப் பறிகொடுத்த மைடர்மட்டும் மனவேதனைப்பட்டான்—இனி அந்தத் தூர்த்தையையும் துஷ்ட சிகாமணியையும் எப்படியாவது தொலைத்துவிட்டு மறு வேலை பார்க்கிறேன் என்று கோபத்துடன் மைடர் கிளம்பினானா? அதுவும் இல்லை! எப்படியாவது இழந்த இன்பத்தைப் பெறவேண்டும் என்றே துடியாய்த் துடித்தான்; சமயம் கிட்டவில்லை.

அங்கஸ், அழகுத் தெய்வமல்லவா!—எனவே அவனிடம் பல பெண்தேவதைகள் காமுற்றுவிடுவது வழக்கம்.