உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

மாஜி கடவுள்கள்


அழகும் கெம்பீரமும் வாய்ந்த இளைஞன் உருவிலே மன்னன் கொலுமண்டபம் சென்று, அவனைச் சொக்கட்டான் விளையாட்டுக்கு அழைத்தான்.

தோற்றவர், கெலித்தவர் கேட்பதைத் தந்தாகவேண்டும் என்பது நிபந்தனை. சொக்கட்டானில் மன்னன் வென்றான்—மைடர் தேவன் தோற்றான்—மன்னன், அயர் நாட்டிலே பெரிய பாதை அமைத்துத் தருமாறு கேட்க மைடர் அதன்படியே செய்து முடித்தான்.

மறு ஆண்டு, மீண்டும் மைடர் தேவன், சொக்கட்டான் ஆடினான்—இம்முறை வென்றான்.—“என்ன வேண்டும் கேள்! தரக் கடமைப்பட்டிருக்கிறேன்!”—என்றான் மன்னன். மன்னன் மனதிலே பேரிடி வீழ்ந்தது, மைடரின் பேச்சு கேட்டு; “நிபந்தனையின்படி நான் கேட்கும் பொருளைத் தந்தாகவேண்டும். மன்னா! உன் மனைவியைக் கொடு!!”—என்றான் மைடர். மன்னன் மனம் குழம்பிற்று. “அடுத்த ஆண்டு வா, அழைத்துச் செல் என் அழகு மனைவியை” என்றுகூறி அனுப்பிவிட்டான். குறிப்பிட்ட நாளில் மைடர் வந்தான், ஆனால் மனைவியை இழக்கத் துணிவானா மன்னன்! காவலர்களைத் திணித்து வைத்தான் அரண்மனை எங்கும், மைடர் உள்ளே நுழையாதபடி!! மாயாவியல்லவா மைடர் தேவன்! உள்ளே வந்துசேர்ந்தான் ஆயிரத்தெட்டு கட்டு காவலையும் சட்டை செய்யாமல். எடெயினை அழைத்தான். அந்த எழிலரசியும் இசைந்தாள். இருவரும் அன்னப்பட்சி உருவமெடுத்து பறந்து சென்றனர்.

கடவுளருகிலே இழந்த கருந்தனத்தை, பூலோகத்திலே, ‘மறு ஜென்மத்திலே’ கண்டெடுத்தான்—எனினும் களித்தான் மைடர்!