ஜூவஸ்
29
தேவர்தம் உலகைத்தானே
தன் திருப்பாதம் தாங்கும்,
ஆசனமாகக் கொண்டான்
அருத்திறன் உடையோன், கண்டாய்.
அவனுரை கேட்ட அண்டம்
அதிர்ந்திடும் அச்சம்கொண்டே
அவன்சிரம் அசையக்கண்டு
தேவரும் பெருவர் திட்டம்.
விதி எனும் கோலும் ஆடும்
வினை எலாம் ஓடும் அவன்முன்
ஆண்டவன் அவன்முன் அண்டம்
அதிர்ந்திடும் அச்சம் கொண்டே!
🞸🞸🞸🞸
இக்கருத்துப்பட, திருப்புகழ் பாடினவர், சாமான்யக் கவிராயர் அல்ல—Homer—உலக மகாகவிகளில் ஒருவர் என்று, எவரும் வியந்து, கூறும் ஹோமர்!
இந்தத் திருப்புகழ், இன்று, கவியின் கற்பனைத்திறத்துக்கும், கவிதையின் சிறப்புக்கும், எடுத்துக்காட்டாக இருக்கிறதேயன்றி, ஜூவசின் பால், பக்தி செலுத்தும்படி, மக்களைத் தூண்டும், சக்தி பெறவில்லை!
மனக்கண்முன், சித்தரித்துப் பாருங்கள்!
பிரம்மாண்டமான ஆலயம்! ஆஜானுபாகுவான உருவமாக, ஜூவஸ் தேவன், சிலை உருவில், இருக்கிறார். மணிமாடங்கள்! மண்டபங்கள்! திருக்குளங்கள்! பூம்பொழில்கள்! மதில்கள்! பிரகாரங்கள்! மடைப்பள்ளிகள்! எல்லாம், செல்வத்தின் சிறப்பை விளக்குவன்போல் உள்ளன. பட்டத்தரசன், அவன் மனதைத் தொட்டுவென்ற அழகி, படைத்தலைவன், பொருள் காப்போன், வணிகவேந்தன், கலைவாணன், எனும் பலரும், தொழுது நிற்கிறார்கள், ஜூவஸ் முன்பு.