38
மாஜி கடவுள்கள்
ஜூவசின் பாலபருவம் இப்படி இருந்தது—தந்தை அப்படி ஒரு குழந்தை இருப்பதாகவே, அறியாமலும், தாயின் பாசத்தைப்பெற முடியாமலும், தாதிமார் தயவால் வாழும் நிலை. ஓரளவுக்கு நமது புராணங்களில், முருகன் வளர்ப்புக்குக் கார்த்திகைப் பெண்களைக் குறிப்பிடுவதுபோல!!
குழந்தை அழுது, அந்தச் சத்தம், தந்தையின் காதிலே விழுந்தால் என்ன செய்வது என்பதற்காக, தந்திரமான ஓர் ஏற்பாடும் இருந்ததாம். பூஜாரிகள் பலர் கூவுவதும் கொக்கரிப்பதும், கூத்தாடுவதும், ஆயுதங்களைக் கொண்டு பேரொலி கிளப்புவதுமாக இருப்பராம். இந்த அமளிச் சத்தத்திலே அமிழ்ந்து போகுமாம், ஜுவசின் அழுகைச் சத்தம்.
குரோனஸ், குதூகலமாக வாழ்ந்து வருகையில், குழந்தை ஜூவஸ் வளர்ந்து வரும் செய்தி எட்டிற்று. அச்சமும் ஆத்திரமும் கொண்டான்; ஜூவசைக் கொல்லத் தீர்மானித்தான். ஆனால் தந்தை போர்க்கோலம் பூணுமுன், தனயன் கிளம்பித் தாக்கினான். தகப்பன் தோற்கடிக்கப்பட்டான். வெற்றி பெற்ற ஜூவஸ், தந்தையின் அரியாசனத்தில் அமர்ந்து தாயின் மந்திராலோசனைப்படி ஆட்சி புரியலானான். குரோனஸ் விழுங்கிய குழந்தைகளை எல்லாம், மீண்டும் அவன் உள்ளிருந்து வெளியே, உயிருடன்கொண்டு வருவதற்காக, கடும்விஷமொன்றைத் தயாரித்து, குரோன்சை பருகச்செய்தான்—உடனே, உள்ளே இருந்த, பாசிடன், ப்ளுட்டோ, ஹெஸ்ட்டியா, டெமீடர், ஹீரா எனும், குழந்தைகள் யாவும் வெளியே வந்தன, உயிருடன். இவைமட்டுமா, குழந்தையென நம்பி விழுங்கிவிட்டானே, கல், அதுவுங்கூட வெளியே வந்துவிட்டதாம். உடன்பிறந்தார்களை, தந்தையின் வயிறாகிய சவக்குழியிலிருந்து மீட்டான்.