கி.ஆ.பெ. விசுவநாதம்
31
மகிழுமாம். அத்தகைய தாய்கூடத் தன் மகன் குடிக்கிறான் என்று அறிந்தால், "ஐயோ அறிவிழந்து விடுவானே, குடிப்பெருமை போச்சே" என்று எண்ணி மனம் புழுங்கித் தன் மகனை வெறுத்து விடுவாளாம். 'என்ன குற்றம் செய்தாலும் பொறுக்கின்ற தாய் முகத்தின் முன்புகூடக் குடி வெறுக்கப்படுமானால், ஒரு சிறு குற்றத்தையும் பொறுக்காத சான்றோர்கள் முகத்தின் முன்னே அவன் என்ன ஆவான்?' என்று கேட்கின்றார் திருவள்ளுவர்! எப்படி இந்தக் கருத்து?.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்-மற்றென்னாகும்
சான்றோர் முகத்துக் களி.
என்பது குறள்.
எ. ஒழுக்கம் உயர்வளிக்கும்
மாணவர்களாகிய நீங்கள் நல்லொழுக்கங்களைப் பின் பற்றிச் சிறந்து விளங்க வேண்டும், இன்றேல் உங்களுக்குப் பெருமையிராது.
"ஒழுக்கம் விழுப்பந் தரும்” என்பது வள்ளுவர் வாக்கு. மரம் கனி தரும். மாடு பால் தரும் என்பது போல, ஒழுக்கம் விழுப்பம் தரும் என்று குறள் கூறுகிறது. விழுப்பம் என்பது சிறப்பு. இதனால், ஒருவன் சிறப்படைய வேண்டுமானால் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தாக வேண்டும் என்பது புலப்படும்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை என்பது வள்ளுவர் கருத்து. இது படிப்பால், பட்டத்தால், பதவியால், பணத்தால் ஒருவன் மேன்மை அடைய முடியாது. ஒழுக்கம்