பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

33


ஞாயிறும் திங்களும் போன்று இரு திறல் மன்னர் நேர் நின்று போரிட்டனர்! திங்கள் தோன்ற, மேற்கில் மறையும் ஞாயிறு போன்று, எம்மன்னன் புறப் புண்பட்டு, வடக்கிருந்தான். இனி, அஞ்ஞாயிறு அடியோடே மறைந்து விடும் சேர நாடும் இருண்டு விடும்!

“பகல் போயிற்றே! இரவு வந்ததே என் தாய் நாடே என் செய்வேன்” என்று அழுதார்! கழாத்தலையார்.


26. யாருடைய புகழ் உயர்ந்தது!

சேரலாதன், புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து மாண்டான். ஆன்றோர் பலர், அவனுடன் உயிர் துறந்தனர்.

குயத்தியார் எனும் பெண் புலவர், சேரலாதனின் சிறப்பைக் கண்டு வியந்தார். அவனை வென்ற பெருவளத்தானைத் தேடிச் சென்றார். அவன் குயத்தியாரை வரவேற்றான்.

“அரசே! நின்னைப் பாடுதற்கு வந்துள்ளேன்” என்றார் குயத்தியார்.

“பாடலாம்” என்றான் அரசன்.

“நின்னைப் பாடினால், அது, சேரனையும் பாடியதாகும். நின்னைப் புகழ்ந்தால், அது சேரனையும் புகழ்ந்ததாகும்” என்று குயத்தியார் கூறினார்.

வடக்கிருந்து மாண்ட சேரலாதன் முகம், சோழன் மனக்கண் முன் பளிச்சிட்டது.