அமைச்சர் வாழ்வு . 13
இதைத்தவிர, மதுரையில் தமிழாராய்ந்த புலவர் கூட்டமும், வாதப்போர் புரியும் தருக்க சங்கங்களும், சமய வாதிகளின் உறவும் வாதவூரரின் கவனத்தை ஈர்க்கின்றன. மதுரையில் பண்டைக் காலத்தில் ஒரு பெரிய கல்விக்கழகம் இருந்தது. அது தமிழ்ச்சங்கம் என்ற பெயரால் வழங்கி வந்தது. மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்து வந்தனவாக இறையனார் களவியலுரையால் அறிய முடிகின்றது. இது தவறு என்று கூறுவோரும் உளர். எனினும் மதுரைக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. இடை இடையே வெள்ளப்பெருக்கும் பஞ்சமும் தோன்றி மக்கள் வாழ்க்கையை மிகவும் சீர் குலைத்துவிட்ட படியால் தமிழ்ச் சங்கமும் காலந்தோறும் தோன்றுதல் அழிதல் என்ற செயலுக்கு உட்பட்டுவந்தது. மூன்றாவது சங்கம் (கடைச் சங்கம்) மறைந்த பின்னரும் சங்கப் புலவர்களின் வழிவந்தோர் தமிழை வளர்த்து வந்தனர். கவிதைகள் எழுதுவதிலும் காவியம் படைப் பதிலும் ஈடுபட்டிருந்த புலவர் பெருமக்கள் சமயவாதங்களிலும் அளவை நூல்களிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இக்காலத்தில்தான் தென்னாட்டில் பெளத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் தீவிரமான பிரசார இயக்கங்கள் தோன்றியிருந்தன. வாதவூரர் மதுரைக்கு வந்து பணியில் அமரும்பொழுது எம்மருங்கும் இந்நிலையைக் காண்கின்றார். இதனை,
ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் ................................. சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர். மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழித்தடித் தாஆர்த்(து)