37 பேராசிரியர் ந.சஞ்சீவி முத்து வடுகநாதன் மாண்டான். அவன் வீரபத்தினி வேலு நாச்சியும் மருது பாண்டியரும் திண்டுக்கல்லுக்குக் காற்றாய்ப் பறந்து சென்றனர். அப்போது திண்டுக்கல் மைசூர் ஆதிக்கத்தில் இருந்தது. பிரிட்டிஷ் அதிகாரத்தைத் தொலைக்க உறுதி பூண்டிருந்த ஐதர் அலி, அப்போது அங்கிருந்தான். அவன் மருது பாண்டியரையும் அரசி வேலு நாச்சியையும் வரவேற்றான்; அவர்கள் விடுதலை வேட்கையையும் வீர உணர்ச்சியையும் கண்டு வியந்து வாழ்த்தினான். இதற்குள் நவாபுவின் ஆளுகைக்கு இராமநாதபுரமும் சிவகங்கையும் இரையாயின. அப்பகுதியை அவன் எட்டு ஆண்டுகட்குக் குத்தகைக்கு விட்டான். கி.பி. 1780 ஆம் ஆண்டு வரை நவாபுவின் தர்பார் அந்த வகையில் நடந்தது மறவர் நாட்டிலே. ஆனால், நாட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தது. கனவிலும் நனவிலும் குடி மக்கள் தங்கள் அரச குடும்பத்தைப் பற்றியே நினைத்துக் கண்ணீர் சிந்தினார்கள். வீரமங்கை வேலு நாச்சி நாட்டை விட்டு வெளியேறியதையும், மருது பாண்டியர்கள் தங்கள் சீமையைப் பிரிந்து வாழ்வதையும் உணர்ந்த போதெல்லாம் அவர்கள் நெஞ்சம் காட்டு நெருப்பாய்க் கனன்று எரியத் தொடங்கியது. இந்நிலையில் மருது பாண்டியர்களும் கை கட்டி வாளா இருக்கவில்லை. மறைமுகமாக அவர்கள் மறவர் நாட்டில் உள்ள மக்களோடு மறைவாகத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார்கள். குடிகளும் தங்கள் அரசிக்கு மறைவாகத் திறைப்பணம் அனுப்பி வந்தார்கள். அதனால், நவாபுவின் குதிரைக்காரனால் தம்படி கூட வசூலிக்க இயலவில்லை. நாட்டிலே வறுமையும் பஞ்சமும் தாண்டவம் ஆடின. கள்ளர்களடித்த கொள்ளை ஊரைக் கலகலக்க வைத்தது. அவர்களை அடக்குவது நவாபுவின் தர்பாரால் ஆகிற செயலா? சிவகங்கைச் சீமையில் நிலவிய இந்த நிலைமையே இராமநாதபுரத்திலும் நிலவியது. இறுதியில் வேறு வழியில்லாமல் நவாபு மறவர் நாடுகளைத் திரும்பவும் பழைய அரச குடும்பத்தினருக்கே திருப்பிக் கொடுத்துவிட நேர்ந்தது. மீண்டும் வேலு நாச்சியே சிவகங்கைக்கு அரசியானாள். மருது சகோதரர்கள் அவர்களுக்கு அறிவொளி காட்டும் அமைச்சர்கள் ஆனார்கள். வெள்ளை மருது, நாட்டு அரசியல் பற்றி அதிகக் கவலை ஏதும் இன்றிப் பழையபடி காட்டு ராஜா ஆனான். அதனால், சின்ன மருதுவே நாட்டின் ஆட்சிக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின் சிவகங்கைச் சீமையின் அரசியலில் பல முறை நவாபுவும் கம்பெனி அதிகாரிகளும் தலையிடுவதும், அதைத் தகர்க்க மருது பாண்டியர் எதிர்த்துப் போராடுவதுமான பல நிகழ்ச்சிகள் நடந்தன. அரசியல் நிருவாகம் வேலு நாச்சியின் கைக்கும் மருது பாண்டியர் கைக்குமாகப் பந்து போல மாறி மாறிச் சென்றது. காரணம், விதவையான அப்பெண்ணரசியால்