பக்கம்:மாபாரதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

31


“என்போல் இன்பத்திடை நீயும் இறப்பாயாக” என்று அம்முனிவன் சாபமிட்டான். அதனால் பாண்டு சிற்றின்ப வாழ்வைத் துறந்து தன் துணைவியருடன் தவம் செய்யக் கருதிக் காட்டுவாசத்தை ஏற்றுக் கொண்டான்.

மக்கட் செல்வம்

வியாசனை வணங்கி ஆசி பெற்றுத் திருதராட்டிரன் மனைவி காந்தாரி நூறு மகவுகள் பெறக்கூடிய கருப்பம் அடைந்தாள். இச் செய்தியைப் பாண்டு கேள்விப்பட்டான். தனக்கு மகவு இல்லையே என்ற ஏக்கம் அவனை வாட்டியது சாபத்தால் அவன் தன் மனைவியோடு கூட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது; என்ன செய்வான்? பாவம்! சுவர் இருந்தும் சித்திரம் வரைய முடியவில்லை.

மிகவும் முற்போக்குச் சிந்தனையுடையவனாய்த் தன் மனைவியிடம் துணிந்து ‘வேறு ஒருவர் துணை கொண்டு தாய்மை அடைக’ எனக் கூறினான். பழமை அவனை விலங்கிடவில்லை. தேவை அவனுக்குப் புதிய சிந்தனையைத் தோற்றுவித்தது. மழலை பேசும் குழந்தை பெறாத வாழ்வு ஒரு வாழ்வாகாது; அதனைப் பேரிழப்பாகக் கருதினான்.

மற்றும் குழந்தைப் பேற்றின் அவசியத்தைத் தொடர்ந்து கூறினான்; உண்மை பேசுதல், தானம் செய்தல், வேள்வி இயற்றல் இவற்றை நாளும் செய்தாலும் குழந்தை முகம் பார்த்து அடையும் இன்பத்துக்கு இவை நிகர் ஆகா.

தென்புலத்தார், தெய்வம், சுற்றத்தார். விருந்து இவர்களை ஒம்பும் இல்லற வாழ்வுக்கு மகப்பேறு அடிப் படையாகும். குழந்தைதான் அன்பின் வளர்ச்சிக்கு ஆரம்பப்பள்ளியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/34&oldid=1048283" இலிருந்து மீள்விக்கப்பட்டது