பக்கம்:மாபாரதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

43


துரோணனும், அவன் மனைவி கிருபியும் மகன் அசு வத்தாமனும் அங்கு இருக்க ஆதரவு தரப்பட்டனர். ஆசிரியர் என்ற மதிப்புத் தரப்பட்டது; சகல வசதிகளும் உடன் செய்து தரப்பட்டன.

“இதுவரை முனிவனாக இருந்தாய்; இனி முனைவனாகப் பதவி உமக்குத் தந்து விட்டோம். நீ அரசர்களைப் போலப் போர் செய்யும் தகுதியும் பெறுகிறாய். பேத மின்றி எங்களில் ஒருவனாய் இருக்கலாம்” என்று கூறி அதற்குரிய மரியாதையையும் வீடுமன் தந்தான். அவனுக்கு வெண் கொற்றக் குடையும், பண்பட்ட பட்டமும். விண்பட்ட கொடியும் தந்து மதிப்பு உயர்த்தினான்.

ஆசிரியப்பணி

அன்று முதல் உதிட்டிரனும் (தருமன்), துரியோதனனும் மற்றும் அவர்கள் தம்பிமார்களும் இவனிடம் படைக்கலப் பயிற்சிகள் பெற்று வந்தனர். விற்பயிற்சியில் அருச்சுனன் மேம்பட்டவனாகக் காணப்பட்டான். அதனால் துரோணன் அவனிடம் அதிக அக்கரை காட்டினான். துரியோதனர்க்கு அதனால் அருச்சுனனிடம் அழுக்காறு உண்டாயிற்று. ஆசிரியன் காட்டிய பாரபட்சம் அவர்களைப் பிரித்து வைத்தது.

இவ்வாறு இருக்கும் நாளில் ஏகலைவன் என்ற வேடுவன் துரோணனிடம் விற்கலை பயில விரும்பி வந்தான். “நேரில் உனக்குக் கற்றுத்தர இயலாது. என்னைக் குருவாக நினைத்து நீயே பயிற்சி பெற்றுக் கொள்” என்று கூறி அனுப்பினான். அவன் துரோணனைப் போன்ற ஒரு சிலை வடித்து வைத்துக் கொண்டு அதனை வழிபட்டு விற்பயிற்சி செய்தான். எனினும் அவன் அருச்சுனனை விடத் திறமை மிக்கவனாக மாறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/46&oldid=1048291" இலிருந்து மீள்விக்கப்பட்டது