பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

139

கவனித்துக் கொண்டிருந்தனவே அன்றி, அந்த மேன்மாடத்தில் வேறே எதையும் அவைகள் பார்க்கவில்லை. அவளது கவனம் முழுதும் வேறு எங்கேயோ சென்றிருந்தது. அத்தகைய சஞ்சல நிலைமையில் அவள் இரண்டு மூன்று நாழிகை காலம் வரையில் மெய்மறந்து வீற்றிருக்க, யாரோ ஒருவர் வந்து தனக்குப் பின் பக்கத்தில் நின்றபடி கைகளால் தனது கண்களைப் பொத்தியதை உணர்ந்த பிறகே, அந்த மின்னற் கொடியாள் திடுக்கிட்டு மருண்டு தனது சுய உணர்வை அடைந்தாள். தங்களது ஜென்ம விரோதியான சட்டைநாத பிள்ளையினால் தங்களுக்கு ஏதேனும் பொல்லாங்கு நேருமோ என்று அவள் எண்ணித் திகில் கொண்டிருந்த நிலைமையில், அவள் சிறிதும் எதிர்பார்க்காதபடி யாரோ ஒருவர் தனது கண்களைப் பொத்தவே, தங்களது பகைவர்தான் ஏதோ துன்மார்க்கமான நினைவோடு அங்கே வந்திருக்கிறார் என்ற சந்தேகமும் பீதியுமே அவளது மனதில் சடக்கென்று உதித்தன. அவளது கைகால்கள், உடம்பு முதலிய அங்கங்கள் எல்லாம் வெடவெட என்று நடுங்கத் தொடங்கின. மயிர்காலுக்கு மயிர்க்கால் வியர்வை குபிரென்று வெளிக்கிளம்பி தந்தம் போல இருந்த அவளது சுந்திரமேனியில் முத்து முத்தாகத் துளித்து நின்றது. ஆனாலும், அடுத்த நிமிஷத்தில் அவளது திகிலும் சஞ்சலமும் விலகிப் போயின. அப்படி வந்தவர் தமது கைகளை மிருதுவாகவும் மரியாதையாகவும் உபயோகப்படுத்தினார் என்பது அவளுக்கு எளிதில் புலப்பட்டது. ஆகையால், அவர் பலாத்காரமாகத் தனக்குத் தீங்கிழைக்க வந்த பகைவர் அல்ல என்ற நிச்சயம் ஏற்பட்டது. மேன்மாடத்திற்கு ஏறிவரும் படிக்கட்டின் வாசற்படி இருந்த பக்கம் தனது முதுகுப் பக்கத்தில் இருந்தது. ஆனாலும், தான் இருந்த இடம் அந்த வாசற்படியில் இருந்து சுமார் 10-கஜ தூரம் இருந்தது. ஆகையால், அவர் அவ்வளவு தூரம் வரையில் நடந்து தனக்கருகில் வந்ததைக்கூட உணராது தான் அவ்வளவு அதிகமாக மெய்மறந்து போயிருந்திருக்க வேண்டும், அல்லது, அவர் வேண்டும் என்றே தமது கால் விரல்களை ஊன்றி ஒசை செய்யாது தனக்கருகில் வந்திருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனாலும் தன்னிடம் அவ்வளவு அதிகமான