பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

245

ஒன்றுக்கு இருபதாய் விலை வைத்து நம்மிடம் கொள்ளை அடிப்பதோடு நம்முடைய தேக ஆரோக்கியத்தையும் ஆயிசையும் குடித்து விடுகிறார்கள். சீமையில் உள்ள வியாபாரிகள் செத்துப்போன குதிரை, நாய் முதலியவற்றின் மாமிசங்களை எல்லாம் பக்குவம் செய்து தேகபுஷ்டி மருந்துகள் என்று நம்முடைய தேசங்களுக்கு அனுப்பிப் பொருள் பறிக்கிறார்கள் என்றுகூடச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். நான் இப்போது சொன்ன இங்கிலீஷ்காரருடைய விருந்தாந்தம் எல்லாம் நம்முடைய கந்தசாமி சொல்ல, நான் கேள்வியுற்றதால், அதில் பொய் இருக்காது என்று நம்பி அதை நான் உங்களிடம் சொல்லுகிறேன். நான் முதலில் சொன்ன திருடர் உவமானம் நம்முடைய வெள்ளைக்காரருக்கு நன்றாகப் பொருந்தும் என்று நினைக்கிறேன். நித்திரை செய்யும் பதினாயிரம் ஜனங்களை சொற்பத் தொகையினரான திருடர்கள் ஜெயித்துப் பொருட்களை அபகரித்துக் கொண்டு போகிறார்கள் என்றேன் அல்லவா. அதுபோல, நம்முடைய தேசத்து முப்பத்து முக்கோடி ஜனங்களும் இந்த உலகப்பற்றை முதன்மையாக நாடாமல் இவற்றில் பற்றில்லாதவராய், அடுத்த உலகத்தின் பேரின்பத் தையே புருஷார்த்தமாக நினைத்திருக்கும் நிலைமையானது, இந்த உலகம் சம்பந்தப்பட்ட வரையில் நம்மவர்கள் துங்கும் நிலைமையில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம் அல்லவா. அந்த நிலைமையில் சொற்ப தொகையினரான அன்னிய நாட்டார் தகுந்த வசதிகளைச் செய்து தங்களை பலப்படுத்திக் கொண்டு நம்மை அடக்கி ஆண்டு நமது பொருள்களை அபகரித்துக் கொண்டு போவது எளிதல்லவா? இதில் இருந்து அவர்கள் நம்மை விட அதிக பெருமை, நாணயம், திறமை முதலியவைகளை உடையவர்கள் என்று நாம் நினைத்து, நம்மவர்களை வெறுத்து நமது பழக்கவழக்கங்களைத் துறந்து, நிரம்பவும் தாழ்ந்த மனப்போக்குடைய அவர்களது தத்துவங்களையும் பழக்க வழக்கங்களையும் நாம் பின்பற்றுவது தான் உசிதமாகுமா? ஆனால் ஒரு விஷயம். தப்பாகவோ, சரியாகவோ, நியாயமாகவோ, அநியாயமாகவோ, அவர்கள் நம்முடைய தேசத்தை ஆளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள்