பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

9

கோபாலசாமி:- அதை மாத்திரம் அவர்கள் விட்டுவிட்டார்களோ, அன்றைய தினம் பத்திரிகையில் நாம் படிக்கவில்லையா? ஜெர்மனியில் யாரோ ஒரு சாஸ்திர நிபுணர் மனிதரை என்றும் சிரஞ்சீவியாக்கக்கூடிய ரகசியத்தைக் கண்டுபிடித்திருக்கிறாராம். குரங்கின் தொண்டையில் உமிழ்நீர் ஊறும் ஸ்தானங்களை எடுத்து மனிதருடைய தொண்டையில் அதே ஸ்தானத்தில் வைத்து ஒட்டு வேலை செய்துவிட்டால், மனிதர் எப்போதும் பாலியப்பருவத்தினராகவே இருந்து விடுகிறார்களாம். அந்த நிபுணர் அப்படி இரண்டொருவருக்குச் செய்து, அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறாராம். ஆனால், அதற்கு ஏராளமான குரங்குகள் தேவையாம். சீமையில் அத்தனை குரங்குகள் அகப்படவில்லையாம். நம்முடைய இந்தியாவில் உள்ள குரங்குகளைப் பிடித்து, கப்பல் கப்பலாக பம்பாயில் இருந்து அனுப்புவதாக அன்றைய தினம் நான் படித்துச் சொன்னதை நீ கவனிக்கவில்லை போல் இருக்கிறது.

கந்தசாமி:- ஒ! அப்படியா சங்கதி! நீ படித்ததை நான் அவ்வளவு நன்றாகக் கவனித்துக் கேட்கவில்லை. எல்லா ரகசியங்களையும் ஜெர்மனிக்காரர்கள் தான் கண்டுபிடிக்கிறார்கள். மற்றவர்கள் உடனே அதை எடுத்துக் கொள்ளுகிறார்கள். இப்போது நடந்த ஜெர்மனி சண்டையில் எதிரிகள் எப்பேர்ப்பட்ட புதிய புதிய இயந்திரங்களையும், தண்ணிருக்குள் மறைந்திருந்து அடிக்கும் கப்பல்களையும், நூறுமையில் தூரம் போய் வெடிக்கக்கூடிய குண்டுகளையும், கண்ணுக்குத் தெரியாத ஆகாய விமானங்களையும் கொண்டு வந்து காட்டி இந்த உலகத்தையே பிரமிக்கச் செய்தார்கள். நம்முடைய இங்கிலீஷ்காரர்கள் அவைகளைப் பார்த்த பிறகு தான் எல்லாவற்றையும் செய்தார்கள் என்று நாம் பத்திரிகைகளில் படிக்க வில்லையா? ஜெர்மனியார் அநாகரிகமான காட்டு மனிதர்கள் என்று இங்கிலீஷ்காரர்கள் அவர்களை இகழ்ந்து ஏளனமாகப் பேசினாலும், அவர்களுடைய தேசத்தில் இருந்துதான் அதிமானுஷத்தன்மை வாய்ந்த தெய்வீகச் செய்கைகள் எல்லாம் வெளியாகின்றன. அவர்கள் மனிதர்களை என்றும் சிரஞ்சீவியாக்கக் கூடிய முறையை இப்போது கண்டு பிடிக்காவிட்டாலும், இன்னும்