பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

305

தீங்கு செய்ய முயற்சிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில், சந்தேகாஸ்பதமான இந்தக் கடிதமும், பெட்டியும் வந்ததைக் காண, பெட்டியை உடனே உடைக்கக் கூடாது என்ற ஒர் எண்ணம் என் மனசில் உண்டாயிற்று. நான் இந்தப் பெட்டியில் பாம்புகள் இருக்கும் என்று நினைக்கவே இல்லை. சில வருஷங்களுக்கு முன் நடந்த ஜெர்மானியச் சண்டையில், அவர்கள் இங்கிலிஷ்காரர்களின் மேல், புதுமாதிரியான வெடிகுண்டு எறிந்ததாகப் படித்தோம் அல்லவா. அந்த குண்டு வெடித்தவுடன் அதிலிருந்து வந்த புகையை சுவாசித்த மனிதர் எல்லோரும் உடனே இறந்து போய்விட்டதாகக் கேள்வியுற்றோம் அல்லவா? அதுபோல, ஏதாவது விஷப்புகை தயார் செய்து இந்தப் பெட்டிக்குள் அடைத்து அனுப்பி இருப்பார்களோ என்ற எண்ணந்தான் என் மனசில் உதித்தது. என்னிடம் பூதக்கண்ணாடி ஒன்று இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு பார்த்தால் சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத மகா அற்பமான வஸ்துக்களும் பெரிது பெரிதாகத் தெரியும்; நான் அந்தக் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பெட்டியை நன்றாகத் திருப்பித் திருப்பி ஆராய்ச்சி செய்து பார்த்தேன். பெட்டியின் மேல் நாலைந்து இடங்களில் ஓர் ஈர்க்குக் குச்சி நுழையும்படியான துவாரங்கள் இருந்தது நன்றாகத் தெரிந்தது. நான் உடனே ஒர் ஈர்க்குக் குச்சியை எடுத்து ஒரு துவாரத்தில் விட்டுப் பார்த்தேன்; குச்சி நெடுக உள்ளே நுழைந்தது ஆகையால், துவாரம் உள்பக்கம் வரையில் போனதென்று நிச்சயித்துக் கொண்டேன். ஆகவே, பெட்டிக்குள் விஷப்புகை எதுவும் இல்லை என்பது உடனே நிச்சயப்பட்டது. பிறகு நான் மெல்லிய குடைக்கம்பி ஒன்றை எடுத்து ஒரு துவாரத்தில் வைத்து வேகமாய் உள்ளே சொருகினேன். உடனே பெட்டிக்குள் புஸ் என்ற சப்தம் உண்டாயிற்று. உண்டாகவே, என் மனசில் பெருத்த யோசனை உண்டாகிவிட்டது. அதற்குள் ஏதோ உயிருள்ள ஜெந்து இருக்கிறதென்ற எண்ணமும், அநேகமாய் அது பாம்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகமும் உண்டாகி விட்டன. ஆகவே, அந்தப் பெட்டியை உடைப்பதா, அல்லது, உடைக்காமல் அப்படியே பூமிக்குள் புதைத்து விடுவதா என்று நான் யோசனை செய்தேன். அதற்குள் இருப்பது இன்ன வஸ்து

மா.வி.ப. I -21