பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

15

நீ சொன்னாய். நானும் யோசித்துப் பார்க்கிறேன். அது இன்னதென்பது விளங்கவில்லை.

கந்தசாமி:- ஒருவேளை இப்படி இருக்கலாம். வயதுவராத சிறு குழந்தைகளான பெண்களுக்கெல்லாம் பட்டனத்துக்குள்ளேயே பல பாட சாலைகள் இருக்கின்றன. இங்கே ஏற்படுத்தி இருப்பது உயர்தரப் படிப்பு மாத்திரம் அல்லவா, அந்த வகுப்புகளில் வயசு வந்த யெளவனப் பெண்களே படிப்பார்கள். ஊருக்குள் இத்தனை ஸ்திரிகளையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தால், . துன்மார்க்கத் தனமும் துஷ்டத்தனமும் வாய்ந்த விடபுருஷர்கள் அநந்தமானவர்கள் இருக்கிறார்கள் ஆகையால், அவர்களால் இவர்களுக்கு ஏதாவது கெடுதல் நேரும் என்ற எண்ணத்தோடு அப்படிப்பட்டவர்களுடைய கண்களில் இவர்கள் படும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும்படி இப்படி ஒதுப்புரமான ஒரிடத்தில் இவர்களுடைய கலாசாலையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கோபாலசாமி:- இப்போது மாத்திரம் அந்த உபத்திரவம் இல்லாமல் போய்விட்டதா என்ன? இந்தப் பட்டனத்தில் உள்ள பெரிய மனிதர்களுள் பெரும்பாலோர் அஸ்தமன வேளைகளில் இந்தக் கலாசாலைக்கு எதிரில் வந்து மோட்டார்களையும், ஸாரட்டுகளையும் வரிசையாக நிறுத்திவிட்டு நின்று காற்று வாங்குவதாகவும், இந்த சென்னைப் பட்டனத்தின் கடற்கரை முழுதிலும், இந்த இடமே சுத்தமாகவும், ரமணியமாகவும் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு ஒரு நாளைப் போல இவ்விடத்திற்கு எல்லோரும் வருவதாகவும் பலர் சொல்ல நாம் கேள்வியுற்றது இல்லையா? வயசு முதிர்ந்த கிழவர்களான எத்தனையோ வக்கீல்களும், ஜட்ஜிகளும் இந்தக் கலாசாலையில் உள்ள பெண் மணிகளின் திருமேனியழகைக் கண்டு ஆநந்திக்கும் பொருட்டு வருகிறார்கள் என்று பலர் நம்மிடம் வந்து புரளியாகப் பேசியதை எல்லாம் நாம் கேட்டதில்லையா? கொஞ்ச காலத்துக்கு முன், ஹிந்துப் பத்திரிகையில் இன்னொரு சங்கதி வெளியாயிற்றே; அது உனக்கு ஞாபகம் இல்லையா?

கந்தசாமி:- என்ன சங்கதி?