26
மாயா விநோதப் பரதேசி
அதைக் கேட்ட கந்தசாமி ஆனந்த மயமாக மாறிப்போய், “ஆமடா! வாஸ்தவந்தான். புதிய பெண்ஜாதி என்றால், யாருக்குத் தான் சந்தோஷமிருக்காது உனக்குக் கலியாணம் என்றால் நீ மாத்திரம் சந்தோஷப்படாமல், விசனித்து மூலையில் உட்கார்ந்து அழுவாயோ? புது மோகத்துக்கு முன் வெயிலாய் இருந்தாலும் நெருப்பாய் இருந்தாலும் உறைக்காது தான். நீ கூடத் தெரியாதவன் பேசுகிற மாதிரி பேசுகிறாயே! அவளை நான் இப்போது மனசால் கூட நினைக்கவில்லை. அவள் தன்னுடைய பங்களாவில் இந்நேரம் ஆனந்தமாக் வீணை வாசித்துக் கொண்டு இருக்கிறாளோ, அல்லது, புஸ்தகம் படித்துக் கொண்டு இருக்கிறாளோ, அல்லது, போஜனம் செய்து கொண்டு இருக்கிறாளோ, அவளை ஏன் நீ இங்கே இழுக்கிறாய்?” என்றான்.
கோபாலசாமி:- அதிருக்கட்டும். காரியம் இவ்வளவு தூரம் முடிவுக்கு வந்திருக்கிறது. உனக்குத் தெரியாமலேயே இவர்கள் இந்தக் கலியானப் பேச்சை முடித்து விட்டார்கள். உன் தாய் தகப்பனார் முதலியோர் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று நிச்சயதாம்பூலம் மாற்றுவதற்காகப் புறப்பட்டு வரப்போவதாக உனக்கு உன் தகப்பனாரும் கடிதம் எழுதிவிட்டார். அதையும் நீ ஒப்புக்கொண்டு விட்டாயே. அந்தப் பெண்ணை நீ ஒரு தடவையாவது பார்க்க வேண்டாமா? உன் தகப்பனார் முதலிய எவரும் இங்கே வந்து பெண்ணைப் பார்க்கவில்லையே. பெண் கருப்பாக இருக்கிறதா, சிவப்பாக இருக்கிறதா, உடம்பில் எவ்வித ஊனமும் இல்லையா என்ற முக்கியமான விஷயங்களையாவது நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டாமா? இந்த விஷயம் சாதாரணமான விஷயமா? மனிதன் ஆயிசுகாலம் வரையில் துக்கப்படுவதும், சுகப்படுவதும் பணத்தினால் அல்ல. அவனுக்குக் கிடைக்கும் பெண்ஜாதியின் குணாதிசயங்களினால்! ஒரு பரம ஏழைக்கு ஏற்படும் சுகம், கெடுதலான மனைவியைப் படைத்த ஒரு கோடீசுவரனுக்கும் கிடைக்காதென்ற விஷயத்தை நீ அறியாதவனா? மனிதன் தன்னுடைய ஆயிசுகால பரியந்தம் க்ஷேமமாகவும் பாக்கியவானாகவும் இருப்பதற்கு உத்தமியான சம்சாரம் அவனுக்கு வாய்ப்பது வீட்டுக்கு அஸ்திவாரம் கோலுவது போன்றதல்லவா? பெண் பெரிய கலெக்டருடைய மகள் என்ற