பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மாயா விநோதப் பரதேசி

பிரஸ்தாபத்தை எடுக்க அஞ்சினேன். அதுவுமன்றி தாங்கள் இப்போது பலமான பந்தோபஸ்தோடு வந்திருப்பதைப் பார்த்து, "நாம் எவ்விதக் குற்றமும் செய்யவில்லையே.! இவர்கள் இவ்வாறு பிரயாசை எடுத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்ன?" என்ற ஒருவித மலைப்பு என் மனதில் ஏற்பட்டது! ஆகையால் இந்தச் சமயத்தில் நான் தங்களிடம் உரிமை பாராட்டுவது ஒழுங்கான காரியமல்ல என்ற எண்ணமும் உண்டாயிற்று. என் வீட்டில் உள்ள வேலைக்காரர் யாராகிலும் ஏதாவது திருட்டு முதலிய குற்றத்தைச் செய்து விட்டார்களா? அப்படி இருந்தால் சொல்லுங்கள்; நான் உடனே அந்த ஆளைப் பிடித்து ஒப்புவிக்கிறேன், ஏதாவது திருட்டுச் சொத்தை அவர்கள் ஒருவேளை இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்களா? அதற்காகத் தாங்கள் சோதனை போட வந்தீர்களா? விஷயம் எதுவாக இருந்தாலும், தாங்கள் வெளியிடலாம்" என்று நிரம்பவும் விநயமாகக் கூறினான்.

இன்ஸ்பெக்டர் வேடிக்கையாக நகைத்து, "மாசிலாமணிப் பிள்ளை! இவ்வளவு சாதுரியமாகப் பேச எப்போது கற்றுக் கொண்டீர்? ஜெயிலில் இருந்த போது கற்றுக்கொண்டீரா? அல்லது, அவ்விடத்தை விட்டு வந்த பிற்பாடு கற்றுக் கொண்டீரா? அப்படிக் கற்றுக்கொண்டவர். அதை முதலில் மற்றவர்களிடம் உபயோகிக்காமல், எங்களிடமே உபயோகிக் கிறீரே! அது தான் சந்தோஷமாக இருக்கிறது. இது எப்படி இருக்கிறதென்றால், கொல்லன் உலையில் ஊசி விற்பது போல் இருக்கிறது. நேற்றுப் பிறந்த குழந்தைப் பிள்ளையான நீர் எனக்குக் காது குத்துகிறீரே! நான் இந்தப் போலீஸ் இலாகாவில் 9 ரூபாய் சம்பளமுள்ள ஜெவான் வேலையிலிருந்து 250 ரூபாய் சம்பளமுள்ள பெரிய இன்ஸ்பெக்டர் வரையில் வந்திருக்கிறேன். இதற்குள் எத்தனையோ மனிதர்களுடைய தந்திரங்களும் புத்தி சாதுர்யங்களும் என்னிடம் வந்து அற்றுப் போயிருக்கின்றன. அத்தனை பெயரையும் நான் ஒரு வாழைப்பழத்தை விழுங்குவது போல அபக்கென்று ஒரு நிமிஷத்தில் வாயில் போட்டுக் கொண்டு விட்டேன். ஆகையால் நீர் என்னிடம்