பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

மாயா விநோதப் பரதேசி

போன்ற பயங்கரமான கொடிய முரட்டு வேலைகள் செய்வதிலோ தமது பொழுதையே செலவிடும் அதிபலிஷ்டர்களான ஏழைக் கூலியாட்களின் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அவர்கள் தமது அன்றாட உழைப்பைத் தீர்த்துக் கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு, தனது மனைவி மக்களிடத்தில் எவ்வளவோ அந்தரங்கமான வாஞ்சையும் உருக்கமும் காட்டி, வரம்பில் நின்று ஒரே உறுதியாக ஒழுகுவதை நாம் காண்கிறோமல்லவா. பத்துப்பதினைந்து குழந்தைகளைப் பெற்று முற்றிலும் தொத்தலாகக் காணப்படும் தமது மனைவியரே அவர்களுக்கு இன்பக் களஞ்சியமாகத் தோன்றுகின்றனர். ரதி தேவியைப் போல இருக்கும் கட்டமுகுவாய்ந்த யெளவன ஸ்திரீகளைக் காணினும், அந்த ஏழைப் புருஷர்களது மனம் சொற்பமும் சலிப்பதே அரிது. அவர்களது உதாரணம் எதைக் காட்டுகிறது? அவர்களது மனம் அற்புதமான திடசக்தி வாய்ந்ததாக அமைந்திருக்கிறதென்று நாம் எண்ணவேண்டுமேயன்றி, அவர்களது தேகம் திமிரற்றது என்று நினைப்பது சிறிதும் பொருந்தாது. நாம் மனிதரைவிட்டு, காட்டு விலங்குகளை எடுத்துக் கொள்ளுவோம். மகா பயங்கரமான மூர்க்க குணமுடைய புலி, கரடி, சிங்கம், யானை முதலிய விலங்குகள் கூட ஒரே ஒரு பெண் விலங்கைத் தமது உயிர்த் துணையாக ஏற்றுக் கொள்வதையும், அவைகளை விட்டு இணைபிரியாமல் ஜதையாகவே எவ்விடத்திலும் சென்று வேட்டையாடுவதையும் நாம் காண்கிறோ மேயன்றி, மேற்படி மிருகங்கள், மாசிலாமணி முதலிய கோஷ்டியாரைப் போல, ஒன்றைவிட்டு ஒன்றாகப் பல பெண் மிருகங்களைத் தேடி அலைவதை நாம் காண்பது அரிது. ஆகவே மனிதரது நிர்ணய மற்ற காமத்திற்கு, ஒருத்தியைவிட மற்றொருத்தி அதிக அழகுடையவளாக இருக்கிறாள் என்பதையாவது, அல்லது, அந்த மனிதர் ஏகபத்திவிரதராக ஒழுகும் இதர புருஷரை விட அதிக தேகத்திமிர் வாய்ந்தவராக இருக்கிறார் என்பதையாவது காரணமாகக் கூறுவது பொருந்தாது. அற்புதமான அழகு வாய்ந்த மனைவியைப்படைத்த புருஷர்கள், அழகில்லாத வேறு குரூபிகளிடத்திலும் ஆசை கொள்ளுகின்றனர். அற்புதமான தேகபலம் வாய்ந்த புருஷர்கள் தமது மனைவியரிடத்திலேயே உறுதியான அன்பை வைத்து மற்றவர்