பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

211

செய்த தவறு உனக்கு நிரம்பவும் பிரதிகூலம் உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட அபார சக்தி வாய்ந்த மூளையை அவன் ஓர் ஆண்பிள்ளைக்கு வைத்திருந்தால் அந்த ஆண்பிள்ளை மகாமேதாவியாக இருப்பதோடு, உன்னதமான பதவியில் இருக்கும் நியாயாதிபதி, வக்கீல் முதலிய ஸ்தானங்களை வகிப்பவற்குத் தகுந்தவனாக இருப்பான். இப்படிப்பட்ட பிரமாதமான அறிவு உனக்கு இருப்பது எப்படி இருக்கிறது என்றால், அறுசுவையும், மாதுரியமான மணமும் நிறைந்த சிலாக்கியமான பஞ்சாமிர்தப் பரமான்னங்கள் ஏராளமாகப் பரிமாறப்பட்டிருக்கும் இலையின் நடுவில் கொஞ்சம் விஷத்தை வைத்தது போல இருக்கிறது. அறிவு முதிர்ச்சி பெறாத ஒரு குழந்தையைக் காணும்போது, அதை எடுத்து அணைத்துக் கொள்ளவும், அதற்கு முத்தம் கொடுக்கவும் வேண்டுமென்ற கட்டுக்கடங்காத ஆவலும், வாஞ்சையும் நம்முடைய மனசில் சுரந்து கரை புரண்டு ஓடுகின்றன. அந்தக் குழந்தை ஊறிக் குளறி மழலையாகப் பேசும் வார்த்தைகளைக் கேட்பது தேவாமிருதம் சாப்பிடுவதைவிட அதிக இனிப்பாகத் தோன்றுகிறது. அதே குழந்தை ஐந்தாறு வயது அடைந்து, அறிவு முதிர்ச்சி பெற்று விடுமானால், அதன் ஒழுங்கான சொற்கள் சர்வ சாதாரணமாகப் போய்விடுகின்றன. அதற்கு முன் நம்மனதில் உண்டான இன்பம் பிறகு உண்டாகிறதில்லை. அதை எடுத்து முத்தமிடவேண்டு மென்ற ஆசையும் உண்டாகிறதில்லை. இது போலவே, ஸ்திரீகளின் தன்மையும். பேதைமை என்பது மாதர்க்கணிகலம் என்கிறபடி அவர்கள் குழந்தைகளைப் போல பரப்பிரம்ம ஸ்வரூபிகளாய் இருந்தால்தான், ஆண்பிள்ளைகளுக்கு அவர்களிடம் கரைபுரண்டெழும் பிரேமையும் வாத்சல்யமும் உண்டாகும். அவர்கள் அச்சமும் கிலேசமும் இல்லாதவராய்ப் பெண்பாலாரிடம் குழந்தை போலக் கொஞ்சி விளையாடுவர். புருஷன் சயனக் கிரகத்தில் பெண்பாலாரோடு நடத்தும் சம்பாஷணைகளும், காரியங்களும், விவேகமும், அர்த்தம் அற்ற குழந்தை விளையாட்டுகள் ஆகையால், அவைகள் பரம ரகசியமாக இருக்க வேண்டும் என்றும், வெளியில் தெரிந்தால் வெட்கக்கேடென்றும் பெரியோர் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆகையால், ஸ்திரீகள் வக்கீல்களைப்