38
மாயா விநோதப் பரதேசி
மனோன்மணியோடு சம்பாஷித்த காலத்தில் அவளது நடையுடை பாவனைகளைப் பற்றி நேருக்கு நேர் அவளைத் துஷித்ததன்றி இங்கிலீஷ்காரருடைய நாகரிகத்தைப் பின்பற்றி நடக்கும் அந்தப் பெண்ணைக் கந்தசாமியும் அவனது வீட்டாரும் விரும்பமாட்டார்கள் என்று கூறி, அவளது மனதைப் புண்படுத்தினான் ஆதலால், அவள் பட்டாபி ராம பிள்ளையினிடத்தில் அந்த சம்பாஷணையின் விவரம் முழுதையும் வெளியிட்டிருக்கலாம் என்று நினைத்தான். அவள் அந்த வரலாற்றை வெளியிட்டு இருப்பின் பட்டாபிராம பிள்ளை தன்னையும் அவமரியாதைப்படுத்தி அனுப்ப நினைத்தாலும் நினைப்பார் என்ற கவலையும் தோன்றி வருத்தியது. ஆனாலும், அவர் தன்னை அத்தகைய உன்னதமான சயனத்தில் படுக்க வைத்திருந்ததில் இருந்து, அவர் தன்னை அவ்வளவாக அவமானப்படுத்த எண்ணவில்லையோ என்ற சந்தேகமும் உண்டாயிற்று.
அவ்வாறு அவன் பலவித எண்ணங்களில் ஆழ்ந்தவனாய்த் தான் இருந்த விடுதி முழுதிலும் சென்று அதன் அமைப்பை ஆராய்ச்சி செய்து பார்க்கத் தொடங்கினான். அந்த விடுதி ஒரு மகாராணியின் அந்தப்புரம் போல சகலமான அலங்காரங்களும் நிறைந்து மனோகரமாகவும் வசீகரமாகவும் இருந்தது ஆனாலும், அதிக விஸ்தாரமாக இராமல் சிறியதாக இருந்தது. அந்த விடுதி "ட" என்ற எழுத்தைப் போல அமைக்கப்பட்டிருந்தமையால், அவன் பஞ்சணை இருந்த பாகத்தைவிட்டு, முடக்கில் திரும்பி அப்பால் இருந்த பாகம் எப்படி இருக்கிறதென்று பார்த்தான். அவ்விடத்தில் ஸ்நான அறை முதலிய சகலமான வசதிகளும் காணப்பட்டன. போஜனம் ஒன்று மாத்திரம் வந்துவிடுமானால், மனிதர் எத்தனை நர்ட்களுக்கு வேண்டுமானாலும் அந்த இடத்திலேயே யாதொரு குறைவும் இன்றி இருப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் அவ்விடத்தில் அமைந்திருக்கவே, அதைக் கண்ட கந்தசாமி அவ்விடத்திற்குப் போய்த் தனது காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு கட்டில் இருந்த இடத்திற்கு மறுபடியும் வந்து சேர்ந்தான். தண்ணீர்க் குழாய் முதலிய வசதிகள் இருந்த பாகத்தின் நாற்புறங்களிலும் உயரமான சுவர்கள் சூழ்ந்து