பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

61

வேண்டிய மாதிரி இன்னதென்பதையும் தெரிந்து கொள்ளாது, தமது பெண்ணை இப்படிக் கெடுத்து வைத்திருப்பது தான் விந்தையாக இருக்கிறது. இவர்தான் இப்படிச் செய்தார் என்றால், என்னுடைய தகப்பனார் முதலியோர் இந்தப் பெண் இப்படிப்பட்ட மனப்போக்கு உடையவளாய் இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், பட்டாபிராம பிள்ளையின் சிநேகத்தைக் கருதி இந்தப் பெண்ணை எனக்குக் கட்டத் தீர்மானித்து விட்டார்கள். இவள் என்னைக் கட்டிக்கொண்டு மன்னார்குடிக்கு வந்து இந்த மாதிரி நடக்க முடியாதென்றும், மற்ற குடும்ப ஸ்திரீகள் நடப்பது போல நடக்க வேண்டும் என்றும் சொன்னதற்கு, அந்த இடத்தில் கலியாணம் செய்து கொள்ளத் தனக்கு விருப்பம் இல்லை என்று இவள் திறந்து சொல்லி விட்டாள். ஸ்திரீகள் புருஷனுக்கு அடங்கி, புருஷர் வீட்டு மனிதர்களோடு ஐக்கியப்பட்டு ஒழுங்காக நடப்பது அத்தியாவசியமான விஷயம் என்று நான் சொன்னதற்கு, இவள் கூறிய மறுமொழி ஒன்றே இவளுடைய மனப்போக்கை நன்றாக வெளிப்படுத்தி விட்டது. "நான் அவர்களுடைய வீட்டில் கேவலம் ஒர் அடிமைப்போல நடந்து கொள்ள வேண்டும் போலத் தோன்றுகிறது. அப்படி நான் என் சுயமதிப்பையும் மரியாதையையும் சுயேச்சையையும் இழந்து, புழுக்கைச்சி போல அவர்கள் வீட்டில் கிடந்து உழன்று புருஷசுகம் அடைவதைக் காட்டிலும், சுயமதிப்போடும், சுயேச்சையோடும் இருந்து, பட்டினி கிடந்து மரிப்பதே சிலாக்கியம் என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயம்" என்று இவள் வெளியிட்ட கருத்தில் இருந்தே, இவள் பெண்ஜாதி புருஷனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் விஷயத்தில் நம்முடைய தேசத்துப் பழக்கவழக்கங்களை அடியோடு விலக்கி, வெள்ளைக்காரருடைய போக்கை முற்றிலும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவள் நமது தேசத்து குடும்ப ஸ்திரிகள் நடக்கும் முறையைக் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாமல், வெள்ளைக்காரருடைய நாகரிகத்தைப் புஸ்தகங்களின் மூலமாய்த் தெரிந்து கொண்டதே இதற்கு முக்கியமான காரணம் எனத்