பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

7

கண்ணப்பா:- அப்படியானால், இந்த உருவத்தை இதற்கு முன்னாகவே தயாரித்து வைத்திருக்கிறீர்களா? இப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஏதாவது நேரும் என்று எதிர்பார்த்து இப்படி முன் ஜாக்கிரதையாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது.

சாமியார்:- இவர்கள் என்னைக் கொல்வதற்கு இப்படிப் பாம்பை அனுப்பப் போகிறார்கள் என்றும், நான் இறந்து போவது போலப் பாசாங்கு பண்ண வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்த்து நான் இந்த உருவத்தைச் செய்யவில்லை. முக்கியமாக அது சிவகாமியின் ஏற்பாடென்றே சொல்ல வேண்டும். நான் இந்தப் போலீஸ் உத்தியோகம் வகித்த பிறகு எத்தனையோ துஷ்டர்களை அடக்கி தண்டனை செய்து வைத்திருக்கிறேன் அல்லவா. அதனால் என்னிடம் அநேகர் பகை வைத்திருக்கிறார்கள். என்னை இரவில் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்திப் பலர் பல கடிதங்கள் அனுப்பினார்கள்; அதைப்பற்றி நான் அவ்வளவாகக் கவலையடையவில்லை. ஆனால், சிவகாமி அதைத் தெரிந்து கொண்டு அதைப்பற்றி நிரம்பவும் கவலைப் பட்டு, அது விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அவள் அடிக்கடி என்னைத் தூண்டியதோடு என்னைப் போல ஒரு பொம்மை தயாரித்து, இப்போது நீங்கள் பார்த்து விட்டு வந்தபடி படுக்க வைத்திருக்கச் சொன்னாள். அவளுடைய உபத்திரவத்திற்காக நான் அதுபோலவே செய்து வைத்திருக்கிறேன். இரவில் நான் யாரும் காணமுடியாத பரம ரகசியமான ஓரிடத்தில் படுத்துக் கொள்ளுகிறது வழக்கம். என்னை வெட்டிக் கொன்று விடுவதாகக் கடிதம் அனுப்பிய விரோதிகள் யாராவது உண்மையிலேயே இரவில் வந்து பலவந்தமாக பங்களாவிற்குள் நுழைந்து என்னைத் தேடும் பட்சத்தில், கட்டிலில் படுத்திருக்கும் அந்த உருவத்தைக் கண்டு, நான்தான் அப்படிப் படுத்திருப்பதாக எண்ணி, எனக்குச் செய்ய உத்தேசிக்கும் மரியாதைகளை அதற்கு நடத்திவிட்டுப் போகட்டும் என்று அதை எப்போதும் இப்போது இருக்கும் நிலைமையிலேயே வைத்திருக்கிறோம். அந்த உத்தேசத்தோடு செய்து வைக்கப்பட்டிருக்கும் பதுமை இப்போது இந்த நல்ல சமயத்தில் உபயோகப்படப் போகிறது.