பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மாயா விநோதப் பரதேசி

பத்திரிகையை வாங்கி அதன் ஒரு மூலையில் வெளியிடப் பட்டிருந்த செய்தியைப் படித்தான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:--

ஓர் அதிசய சம்பவம்

சென்னையில் பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்த்து வரும் பட்டாபிராம் பிள்ளை என்ற கனவானும் அவரது ஒரே புத்திரியும் புரசைப்பாக்கத்தில் ஒரு பெரிய பங்களாவில் இருந்து வருகிறார்கள். அந்தப் பெண்ணை மன்னார்குடியில் உள்ள பிரபல மிராசுதாரரான வேலாயுதம் பிள்ளையின் இளைய குமாரர் கந்தசாமி பிள்ளைக்குக் கலியாணம் செய்வதாக அவர்கள். நிச்சயித்து, அடுத்த வெள்ளிக்கிழமை அன்று நிச்சயதார்த்தத்தைப் புரசை பாக்கம் பங்களாவில் நடத்த உத்தேசித்தார்களாம். சென்ற சனிக்கிழமை அன்று பகலில் பட்டாபிராம பிள்ளை அவரது கச்சேரிக்குப் போயிருந்தாராம். அவருடைய குமாரத்தி பங்களாவின் மேன்மாடத்தில் படித்துக் கொண்டிருந்தாளாம். வேலைக்காரரும் வேலைக்காரிகளும் கீழே இருந்தார்களாம். அப்போது, ஒரு யௌவனப் புருஷரும், யௌவன ஸ்திரீயும் தமது வேலைக்காரியோடு வந்து தாங்கள் கோமளேசுவரன் பேட்டையில் உள்ளவர்கள் என்றும், பெண்ணைப் பார்த்து விட்டுப் போக வந்திருப்பதாகவும் சொன்னார்களாம். அவர்களை வேலைக்காரி ஒருத்தி பெண்ணினிடம் அழைத்துக் கொண்டு போய்விட்டாளாம். பெண் அவர்கள் வந்திருக்கும் செய்தியை டெலிபோன் மூலமாக உடனே தனது தகப்பனாருக்குத் தெரிவித் தானாம். தகப்பனார் எப்படியோ சந்தேகங்கொண்டு உடனே மன்னார்குடிக்குத் தந்தி அனுப்பி பதில் தந்தி வருவித்தாராம். பதில் தந்தியில் வேலாயுதம் பிள்ளை, தமக்கு மைத்துனியே யாரும் இல்லை என்றும், வந்திருப்பவர் ஒருவேளை தமது பகைவரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், ஜாக்கிரதையாக நடந்து கொள்ளும்படிக்கும் எழுதி இருந்தாராம். அதை உணர்ந்த பட்டாபிராம பிள்ளை உடனே தமது பங்களாவிற்கு வந்து, அவர்களைக் கண்டு உண்மையைக் கேட்க, அவர்கள் உண்மையான வரலாற்றைச் சொல்ல மறுத்து விட்டனராம்.