பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மாயா விநோதப் பரதேசி

துரத்திவிட வேண்டும். துரத்திவிடுவதைக் கூட நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும். நீங்கள் பட்டணத்தில் இருந்து இவளைக் கொண்டு வந்த போது உபயோகித்த மயக்க மருந்தையே, இவள் தூங்கிக் கொண்டிருக்கையில் மூக்கில் பிடித்து, இவள் மயங்கிப் போகும்படி செய்து, இவளைத் தூக்கி மோட்டார் வண்டியில் வைத்துக் கொண்டு போய் நீடாமங்கலம் முதலிய தூரமான ஊரில் உள்ள சத்திரம்சாவடி முதலிய ஏதாவது ஓரிடத்தில் படுக்க வைத்து விட்டு வந்துவிட்டால், தான் இன்னவிடத்தில் இருந்தது என்ற இடமே இவளுக்குத் தெரியாமல் போய்விடும். இது கும்பகோணம் என்பதும், நாம் இன்னார் என்பதும் தெரியாது. ஆகையால், இங்கே நடந்த கலியாணம், சோபனம் முதலியவைகள் எல்லாம் இவளுக்குக் கனவு போல ஆகிவிடும். பின்பு இவளால் நமக்கு எவ்வித இடரும் ஏற்படாமல் போகும்.

இ. சேர்வைகாரன்:- சரி; அப்படியே செய்து விடுவோம், நாம் இவ்வளவு பணச்செலவு செய்து அரும்பாடுபட்டு இவளைக் கொணர்ந்து இவ்வளவு சீக்கிரத்தில் அனுப்பி விடுவதற்கு என் மனம் சம்மதிக்கவில்லை. ஆகையால் நீங்கள் குறைந்தது ஒரு வார காலமாவது இவளை இங்கே வைத்திருந்து இவளுடைய கருவத்தை அடக்கி ஓட்டிவிட்டால், நமக்கு ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்திற்கு அது ஓர் ஆறுதலாக இருக்கும். தங்களுடைய ஆசைநாயகி ரமாமணியம்மாள் இதைப்பற்றி சந்தேகங் கொள்ளாதபடி நாம் ஏதாவது தந்திரம் செய்யலாம். இந்தப் பெண்ணை சரியான தருணம் பார்த்து ரகசியமாக வெளிப்படுத்த உத்தேசிப்பதாகவும், நானும் என் வேலையாள்களும் வேறு வேலையாக எங்கேயோ போயிருப்பதால், நாங்கள் திரும்பி வந்தவுடன் இவளைக் கொண்டு போய் விடச்செய்ய வேண்டும் என்றும் ரமாமணியம்மாளுக்குச் சமாதானம் சொல்லி வையுங்கள். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாத சங்கதியா? இந்த ரமாமணி அம்மாளைப் போல ஆயிரம் அம்மாள்களைத் தாங்கள் ஒரு நிமிஷத்தில் எத்திவிடுவீர்களே! தங்களுக்கு நான் யோசனை சொல்லிக் கொடுக்க வேண்டுமா?