இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வருகின்றான் வசந்தனிங்கே வாட்டமேன் -என்றுன்றன்
இருசெவிகள் தேன்பாய யாருரைத்தார் நற்சேதி?
பழங்கந்தை உடைநீத்துப் பசுமைகொண்ட மாமரமே!
அழகுச் சிறுகன்னி ஆகிவிட்ட மாயம் என்ன?
வசந்தனுன்றன் காதலனை வரவேற்க மெய்த் தோழன்
வசந்தசகன் ஆர்வமுடன் மலையத்தே பெற்றுவந்த
தென்றல்தேர் வெள்ளோட்டம் வரநாணிச் சிவந்தாயோ?
சென்றுவந்தகுயிற்பாணன் தீம்பாடல் கேட்டாயோ?
கேட்டவுடன் மெய்சிலிர்க்கக் கிழட்டாடை உதிர்ந்ததுவோ?
தீட்டரிய பசுமஞ்சள் செம்பசுமை தாம்குழைத்த
புதுப்பட்டு மெல்லாடை போர்த்துவன தேவதைபோல்
மதுத்துளிக்கும் பூச்சூடி வண்டினங்கள் இசைமுரல
இளமை வனப்பெல்லாம் எய்தி நல்ல காட்சிதந்தாய்
பளபளத்து மின்னிமின்னிப் பகலவனின் பொற்கதிரில்
என்னென்ன கற்பனைகள் என்னகத்தே கூட்டு -வித்தாய்!
26