பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

மிஸ்டர் விக்கிரமாதித்தன் வரலாறு

அன்று 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்' என்று மணமக்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்த இந்த பரத கண்டத்திலே, 'எண்ணி இரண்டே இரண்டு பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு மேல் போனால் இன்னும் ஒன்றே ஒன்று-ஆக மூன்று. அந்த மூன்றைத் தாண்டாதீர்கள்!” என்று அறுதியிட்டு ஆசீர்வதிக்கும் ‘இந்தியா, இந்தியா' என்று ஒரு தேசம் உண்டு. அந்தத் தேசத்திலே 'தமிழ் நாடு’ என்று கூறா நின்ற “மதராஸ், மதராஸ்' என்று ஒரு மாகாணம் உண்டு. 'கூச்சமில்லாமல் இங்கே யாரும் மூச்சுக்கூட விடக் கூடாது’ என்று கூறும் கூவமாநதி, கொசு மகா ஜீவராசிகளிடம் கொண்ட கருணையால் ஓடா நின்ற இந்த மதராஸ் பட்டணத்திலே, ‘உச்சினி மாகாளிப் பட்டணம்’ என்று ஒரு பட்டணம் இல்லாவிட்டாலும் 'சர்தார் உஜ்ஜல் சிங், உஜ்ஜல் சிங்’ என்று ஒரு கவர்னர் உண்டு. அந்த கவர்னராகப்பட்டவர் அடிக்கடி பவனி வரும் 'மலையில்லா மலைச்சாலை'யான மெளண்ட் ரோடிலே 'ஒன் டு த்ரீ, ஒன் டு த்ரீ' என்று சொல்லப்பட்ட ஒர் ஏலக் கம்பெனி உண்டு.

அந்தக் கம்பெனியிலே ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை அதன் ஏலதாரர் ‘ஸ்பிரிங்’ வைத்துத் தைத்த குஷன் நாற்காலி ஒன்றின் மேல் ஏறி நின்று 'குதி, குதி' என்று குதித்து, "குவியான நாற்காலி, உங்களைக் குதிக்க வைக்கும் நாற்காலி!"’ என்று அந்த நாற்காலியின் அருமை பெருமைகளையெல்லாம் அடுக்கடுக்காகச் சொல்லி, "கேளுங்கள்-பத்து ரூபா, இருபது ரூபா, முப்பது ரூபா" என்று ஏலம் விட்டுக் கொண்டே போய்த் திடீரென்று கீழே குதித்து நிற்க, அப்போது இந்த நாட்டின் 'பற்றாக்குறை மன்னர்'களில் ஒருவரும், படு அசடுமான சந்திரவர்ணராகப் பட்டவர் அதைக் கண்டு அதிசயித்து, ‘இது என்ன ஆச்சச்சரியம்! அந்த நாற்காலியின்மேல் ஏறி நிற்கும் போது நீர்