பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


ஏதும் இல்லாதவர்களையே 'ஆண் பிள்ளை’ என்ற ஒரே காரணத்துக்காகச் சுற்றிச் சுற்றி வரும் ‘பெண்ணைப் பெற்ற பாவ'த்தைச் செய்தவர்கள், இரண்டு கிராமங்களுக்கு அதிபதிகளாயிருந்த இவர்களைச் சுற்றிச் சுற்றி வராமல் இருப்பார்களா? வந்தார்கள். அதன் காரணமாக ஜானகி என்ற கன்னிகைக்கும், ராமன் என்ற காளைக்கும் வெகு சீக்கிரத்திலேயே வில்லை முறிக்காமல், விசுவாமித்திரரைத் தேடாமல் கலியாணமாயிற்று. அன்றிருந்தே 'தம்பி லட்சுமணனுக்கும் கலியாணம் பண்ணிவிடு!’ என்று அந்த ஊராரில் சிலரும், 'பண்ணாதே, சொத்தில் பங்கு கேட்க வந்துவிடுவான்!’ என்று இன்னும் சிலரும் ராமனுக்குத் தூபம் போட்டு வருவாராயினர்.

‘லட்சுமணனுக்கு இல்லாத கவலை அவர்களுக்கு ஏன்?' என்று நீங்கள் கேட்பீர்கள். அவர்களில் சிலருக்கு, 'பொழுது போக வேண்டுமே!’ என்ற கவலை; இன்னும் சிலருக்கு, ‘அதன் காரணமாகவாவது அந்த அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வராதா? அதை நாம் கண் குளிரப் பார்க்க மாட்டோமா?’ என்ற ஆசை!

ஊரார் இங்ஙனமிருக்க, தம்பி லட்சுமணனோ தன் கலியாணத்தைப் பற்றித் தன்னுடைய அண்ணன் தன்னிடம் சொல்லும்போதெல்லாம், 'ஆயிரம் ஆண்கள் சேர்ந்து ஒரே இடத்தில் இருந்தாலும் இருக்கலாம்; இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு நாளும் இருக்கமுடியாது. எனக்கு ஏன் இப்போது கலியாணம்?’ என்று சொல்லித் தட்டிக் கழித்து வருவானாயினன்.

அண்ணனும் அதற்குமேல் அவனை வற்புறுத்தவில்லை; வற்புறுத்த அவன் மனைவியும் அவனை விடவில்லை. ‘அதுவே கலியாணம் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லும் போது நீங்கள் ஏன் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்? பேசாமல் இருங்கள்!' என்று அவள் அவனை அடக்கி வைப்பாளாயினள்.