பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131


இப்படியாகத்தானே மலையுச்சியில் வாழ்ந்து வந்த அந்தக் குடும்பம் திடீரென்று நாகரிகத்தின் உச்சிக்குப் போக, அதன் காரணமாகத்தானோ என்னவோ, ஆண்-பெண் பேதத்தைக் கூட மறந்து பழகும் பல 'அபூர்வ நண்பர்கள்' அவர்களுக்கு வாய்ப்பாராயினர். அதற்குப் பின் இட்டிலி, தோசை சாப்பிடுவதைக்கூட அநாகரிகமாகக் கருதிய அவர்கள் பன் பட்டர், ஜாம், பிரெட் என்று சாப்பிட்டு வந்த காலையில், ஒரு நாள் இருபத்திரண்டு வயது நிறைந்த சாமைச் சுட்டிக் காட்டி, ‘இவ்வளவு பெரிய பிள்ளையா உங்களுக்கு இருக்கிறார்?’ என்று நாற்பத்து நாலு வயது நிறைந்த மிஸ்டர் செவன் ஹில்ஸை அவருடைய சிநேகிதிகளில் ஒருத்தியான ஐம்பத்து நாலு வயது சீமாட்டி ஆச்சரித்துடன் கேட்க, மிஸ்டர் செவன் ஹில்ஸ் திடுக்கிட்டு, ‘அவன் என் பிள்ளை இல்லை, தம்பி!' என்று அவனுக்குத் தெரியாமல் சொல்லி அவளைச் சமாளிப்பராயினர்.

எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட இந்த அசம்பாவிதம் குறித்து அன்றிரவே மிஸ்டர் செவன் ஹில்ஸ், மிஸஸ் செவன் ஹில்ஸுடன் கலந்து ஆலோசிக்க, 'ஆபத்து, ஆபத்து! அவன் இங்கே இருந்தால் நம் உண்மை வயது நம்முடைய நண்பர்களுக்கெல்லாம் தெரிந்துவிடும்போல் இருக்கிறது; அவனை உடனே வேறு எங்கேயாவது அனுப்பப் பாருங்கள்!' என்று அவள் அலறோ அலறு என்ற அலற, அவனை எங்கே அனுப்பி வைப்பதென்று அவர் அன்றிரவு முழுவதும் யோசித்தார், யோசித்தார், அப்படி யோசித்தார். கடைசியில் ‘மேல் படிப்பு என்ற சாக்கில் அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்துவிட்டால் என்ன?’ என்று மிஸ்டர் செவன் ஹில்ஸ் மிஸஸ் செவன் ஹில்ஸைக் கேட்க, 'அதுதான் சரி, அதுதான் சரி!' என்று அவர் சொன்னதை அவள் அப்படியே ஆமோதிப்பாளாயினள்.

இந்த விதமாகத்தானே சீமைக்குப் போன செல்வன் சாம், அங்கே மேலே படித்தானோ இல்லையோ, திரும்பி