விந்தன்
155
‘மூன்று மாதங்களாக மூடி மறைத்தது போதாதா? இன்னுமா மூடி மறைக்கவேண்டும் என்கிறீர்கள்? இனி ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஒன்று அவள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவேண்டும்; இல்லை, அவளுக்குப் பதிலாக நாமாவது நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியே கிடையாது!’
‘அதற்கு என்ன அவசரம் இப்போது? எதற்கும் 'யார், என்ன?’ என்று விசாரித்துத்தான் பார்ப்போமே?'
‘எல்லாம் விசாரித்துப் பார்த்தாச்சு! அவள் எங்கே வாயைத் திறக்கிறாள்? செய்ததையும் செய்துவிட்டு ஊமைக் கோட்டான் மாதிரி வாயைத் திறக்காமல் இருக்கிறாள்!' என்று சொல்லிக்கொண்டே அவள் கோகிலத்தின் கன்னத்தில் ஓர் இடி இடிக்கப் போனாள்.
நான் அவளைத் தடுத்து, ‘கொஞ்சம் பொறு, நானே விசாரிக்கிறேன்!' என்று சொல்லிவிட்டு, ‘சொல், அம்மா! யார் அவன்?' என்றேன்.
‘அம்மா, அம்மா என்றால் சொல்வாளா? ‘கண்ணே, கண்ணே!' என்று வேண்டுமானால் கொஞ்சிப் பாருங்கள்; சொல்வாள்!' என்றாள் அவள் கேலியாக.
பொறுமையிழந்த நான், 'கொஞ்ச நேரம் நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னால் உள்ளதைச் சொல்பவள்கூடச் சொல்லமாட்டாள் போல் இருக்கிறதே?' என்று அவள்மேல் எரிந்து விழுந்தேன்.
‘என்னால்தானா சொல்லவில்லை? அவள் அருமை அப்பா நேற்று முழுவதும் தன்னால் ஆன மட்டும் அவளைக் கேட்டுப் பார்த்துவிட்டுக் கடைசியில் என்ன செய்தார் தெரியுமா, உங்களுக்கு.'
‘என்ன செய்தார்?'