பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163

4

நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கல்யாணி சொன்ன

ஆண் வாடை வேண்டாத

அத்தை மகள் கதை

"கேளாய், போஜனே! உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தை ஆண்ட சாட்சாத் விக்கிரமாதித்த மகாராஜன் காடாறு மாதம், நாடாறு மாதம் வாழ்ந்தானல்லவா? அதே மாதிரி மிஸ்டர் விக்கிரமாதித்தரும் ஊட்டியில் ஆறு மாதமும், சென்னையில் ஆறு மாதமுமாக இருப்பதுண்டு. அங்ஙனம் இருந்து வருங்காலையில் அவர் ஒரு சமயம் சிட்டியைச் சென்னையிலேயே விட்டுவிட்டுப் பாதாள சாமியுடன் காரில் ஊட்டிக்குப் புறப்பட, வழியில் அந்தக் கார் பழுதாகி நின்றுவிட, 'என்னடா, பாதாளசாமி! இப்படி வந்து அகப்பட்டுக் கொண்டோமே? மேலே எப்படிப் பிரயாணத்தைத் தொடருவதென்று தெரியவில்லையே? பக்கத்தில் ரயில்வே ஸ்டேஷனோ, பஸ் ஸ்டாண்டோகூட இருப்பதாகத் தெரியவில்லை. இரவு எங்கேயாவது தங்கிப் பொழுது விடிந்ததும் போகலாம் என்றாலும் அதற்ககேற்ற ஊரோ, ஓட்டலோ அருகில் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்யலாம்? எப்படி இந்த நிலைமையைச் சமாளிக்கலாம்?’ என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் கேட்க, அதோ இருக்கிறது பாருங்கள் ஒரு கோயில், அந்தக் கோயில் மண்டபத்துக்குப் போய், அங்கே தங்கியிருங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் காரைச் சரி பார்த்துக் கொண்டு அங்கே வந்துவிடுகிறேன்!' என்று பாதாளசாமியாகப்பட்டவன் சொல்ல, 'அதுதான் சரி!' என்று விக்கிரமாதித்தரும் அந்தக் கோயிலை நோக்கி நடப்பாராயினர்.