பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

167


பங்காரு அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘வழி தவறி வந்துவிட்டேன் என்றால் என்ன அர்த்தம்? வாழ்க்கையில் வழி தவறிவிட்டாயா? இல்லை. பிரயாணத்தில் வழி தவறிவிட்டாயா?' என்று கேட்க, 'பிரயாணத்தில் தான் வழி தவறிவிட்டேன், அம்மா!’ என்று அவள் சொல்ல, 'அப்படி யென்றால் பரவாயில்லை! இன்றிரவு நீ இங்கே தங்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை!’ என்று பங்காரு சொல்லி நிறுத்த, ‘என்ன நிபந்தனை?' என்று வந்தவள் கேட்பாளாயினள்.

‘என் கணவர் ஒரு மாதிரி! நீயோ என்னைவிட அழகாயிருக்கிறாய். சந்தைக்குப் போயிருக்கும் அவர் வந்து பார்த்தால் நிச்சயம் என்னை மறந்துவிடுவார்! ஒன்று வேண்டுமானால் செய்; நீ ஆண் வேடம் போட்டுக்கொள். இன்றிரவு இங்கேயே தங்கலாம்; பொழுது விடிந்ததும் போய்விடலாம்' என்று பங்காரு சொல்ல, 'சரி!’ என்று அவளும் ஆண் வேடம் போட்டுக்கொண்டு அங்கே தங்குவாளாயினள்.

சந்தைக்குப் போயிருந்த பெரியண்ணன் வந்தான்; நடையில் ஆண் வேடம் தரித்துப் படுத்துக் கொண்டிருந்த வழி தவறி வந்தவளைப் பார்த்தான். ‘யார் இவன்? எதற்காக இவனை அவள் இங்கே படுக்க வைத்திருக்கிறாள்?’ என்று நினைத்த அவன் ஆண் வேடக்காரியைத் தட்டி எழுப்பி, ‘யாரப்பா நீ, எங்கே வந்தாய்? இங்கே ஏன் படுத்திருக்கிறாய்?' என்று கேட்க, ‘நான் ஒரு வழிப்போக்கன். இருட்டி விட்டதால் இன்றிரவு இங்கே தங்கக் கொஞ்சம் இடம் கொடுக்கும்படி அம்மாவைக் கேட்டேன். கொடுத்தார்கள்; படுத்துக்கொண்டிருக்கிறேன்!' என்று அவளாகப்பட்ட அவன் சொல்ல, பெரியண்ணன் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘இன்றிரவு மட்டுந்தானே இங்கே தங்கப் போகிறாய்? பரவாயில்லை; தங்கு. ஆனால் ஒரு நிபந்தனை!' என்று அவனும் தன் மனைவியைப் போலவே சொல்லி நிறுத்த, 'என்ன நிபந்தனை?' என்று வந்தவள் வியப்பின் மிகுதியால் வாயைப் பிளப்பாளாயினள்.