பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

185

டாக்சி விபத்துக்குள்ளாகி வாயைப் பிளந்துவிட்டார்!’ என்று அவர் அவனைப் பற்றிக் கேட்காவிட்டாலும், அவளே அவனைப் பற்றி அவரிடம் மறக்காமல் சொல்ல, 'அவன் போனால் இன்னொருவன்; நீ வா, நாம் குளுகுளு அறைக்குப் போய் குளுகுளு என்று இருப்போம்!' என்று அவர் அதைப் பொருட்படுத்தாமல் அவளை ஆசையுடன் அழைக்க, அதைக் கேட்டு வராந்தாவில் இருந்த பிரபாகரின் இதயம் 'டக்'கென்று நிற்க, அவன் அப்படியே சுருண்டு கீழே விழுந்து ‘ஆத்ம சாந்தி' அடைவானாயினன்.'

பாதாளசாமி இந்தக் கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘பிரபாகர் செத்ததற்கு யார் காரணம்? அவனா, கோபியா?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, அவர் வேண்டுமென்றே பேசா நிருபரை ஒரு கண்ணால் பார்த்தபடி, ‘பிரபாகர்தான்!’ என்று இன்னொரு கண்ணால் பாதாளசாமியைப் பார்த்துக் கொண்டே சொல்ல, அதைக் கேட்ட பேசா நிருபர் தன்னை மீறிய அதிர்ச்சிக்குள்ளாகி, ‘இல்லையில்லை; அவன் செத்ததற்கு அந்த நன்றி கெட்ட கோபிதான் காரணம்!’ என்று ஆவேசத்துடன் கத்த, ‘பேசிவிட்டார்! பேசா நிருபர் பேசிவிட்டார்!’ என்று விக்கிரமாதித்தர் சிரித்துக்கொண்டே சொல்லி, அந்தப் பேசும் நிருபரை பேசும் தோழருடன் அனுப்பி வைப்பாராயினர்."

ந்தாவது மாடியின் ரிஸப்ஷனிஸ்ட்டான மனோன் மணி இந்தப் 'பேசா நிருபர் கதை'யைச் சொல்லி முடித்து விட்டு, “நாளைக்கு வாருங்கள்; ஆறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மோகனா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...