பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


இந்தக் கடிதத்தைப் படித்ததும் 'ஐயோ, மகனே!' என்று நான் அலறிக் கொண்டே கீழே சாயப் போக, ஆரஞ்சு வண்ணத் தலைப்பாகைக்காரன் அடியேனைத் தாங்கிப் பிடித்து, ‘கவலைப்படாதீர்கள்! உங்கள் மகனுக்கு ஒன்றுமில்லை; செளக்கியமாகவே இருக்கிறார்!' என்று அபயம் அளிக்க, 'எங்கே, எங்கே.' என்று நான் துடிக்க, 'இங்கே, இங்கே!' என்று அவன் என்னை எங்கேயோ அழைத்துக்கொண்டு போவானாயினன்.

வழியில், 'நீ யாரப்பா? எங்கே இருக்கிறாய்? அவனை எங்கே பார்த்தாய்?’ என்று நான் அந்தப் பிள்ளையாண்டானை விசாரிக்க, ‘நான் ஒரு புகழ் பெற்ற எல். டி.சி. அதாகப் பட்டது, ‘அஸிஸ்டெண்ட்' என்று சொல்லா நின்ற லோயர் டிவிஷன் கிளார்க்கு; பெயர் கனகம். அடுத்த தெருவில் குடியிருக்கிறேன். நேற்று மாலை நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு ஏரிக் கரை வழியாக வந்து கொண்டிருந்தபோது ஏதோ ‘சலசல'வென்று சத்தம் கேட்டது. சுற்று முற்றும் பார்த்தேன்; எனக்கு அருகிலிருந்த ஒரு மரத்தின்மேல் உங்கள் மகன் உட்கார்ந்து 'திருதிரு'வென்று விழித்துக் கொண்டிருந்தார். 'பேயோ, பிசாசோ?' என்று நான் அவரைக் கண்டு பயப்பட, அவர் என்னைக் கண்டு பயந்து சட்டென்று கீழே குதித்தார். குதித்த மனுஷன் நேராகத் தரைக்கு வரவில்லை; கழுத்தில் மாட்டிய கயிற்று வளையத்துடன் மரத்திலேயே தொங்கினார். 'அடப் பாவமே! இவர் தூக்குப் போட்டுக் கொள்ள வந்த மனுஷன் போலிருக்கிறதே?' என்று நான் ஓடிப் போய் அவர் கழுத்திலிருந்த கயிற்றைக் கழற்ற, ‘என்னை விடு, விடு என்னை!' என்று அவர் குதிக்க, ‘கொஞ்சம் பொறுங்கள்' என்று நான் 'அந்தக் கயிற்று வளையம் அவருடைய கழுத்தை ஏன் அதுவரை இறுக்காமல் இருந்தது?’ என்று கவனிக்க, அதிலிருந்த முடி சுருக்கு முடியாவிட்டதால் கெட்டி முடியாயிருக்கவே, ‘என்ன ஆளய்யா, நீர்! சுருக்கு முடிகூடப் போடத் தெரியாமலா தூக்குப் போட்டுக் கொள்ள