பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


‘அதெல்லாம் ஒன்றுமில்லை; அந்த மூர்ச்சை போட்டு விழுந்த அழகியை ஏற்கெனவே தெரியும் எனக்கு. கரப்பான் பூச்சி என்றால் அவளுக்கு ஒரே பயம் என்பதையும், அதைக் கண்டால் அவள் உடனே மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விடுவாள் என்பதையும் நான் அறிவேன். ஆகவே, புதிய அழகியிடம் அதைக் கொடுத்து, மெல்ல அவள் மேல் விடச் சொன்னேன். அவ்வளவுதான் என்று சிட்டி விளக்குவாராயினர்.

‘அப்படியா சேதி? அந்தப் பெருமை உன்னைச் சேருவதற்குப் பதிலாக இப்பொழுது என்னையல்லவா சேர்ந்திருக்கிறது?’ என்று விக்கிரமாதித்தர் உள்ளது உள்ளவாறு சொல்ல, 'அதுதான் கிவ்வையார் அருளிச் செய்த கிலக நீதி!’ எனச் சிட்டி உரைப்பாராயினர்.

இத்தகைய பெருமை வாய்ந்த எங்கள் விக்கிரமாதித்தரை நீங்கள் வந்தவுடன் பார்த்துவிட்டால் அதில் அவருக்குத்தான் என்ன பெருமை, எனக்குத்தான் என்ன பெருமை? இப்போது வேண்டுமானால் போய்ப் பாருங்கள்!’ என்று முதல் மாடி வரவேற்பறைக்குப் பொறுப்பேற்றிருந்த வனிதாமணி ரஞ்சிதம் சொல்ல, அப்போது அங்கே வந்த ஆபீஸ் பையன், ‘அவர் கிளப்புக்குப் போய்விட்டார்!’ என்று அறிவிக்க, “நாளை வந்து பார்த்துக் கொள்கிறோம்’ என்று போஜனும் அவருடைய நண்பர் நீதிதேவனும் கீழே இறங்கிப் போவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.......