பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

2

இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன

பாதாளக் கதை

இரண்டாம் நாள் காலை போஜனாகப்பட்டவர் பல்லைத் தேய்க்காமலே காபி குடித்துவிட்டு, காலைப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டுப் புரட்டிப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் குளித்து, ‘அடுத்த வீட்டுக்காரன் பூஜை செய்கிறானே!' என்பதற்காகத் தானும் தன் மனைவியையும், அவள் செய்து கொண்டிருக்கும் சமையலையும் நினைத்துக் கொண்டே பூஜை செய்து, முப்பத்திரண்டு தருமங்களில் ஒரு தருமத்தைக்கூடச் செய்யாமல், சம்பிரமமாகச் சாப்பிட்டு, தாம்பூலம் தரித்து, மிஸ்டர் விக்கிரமாதித்தரின் சந்நிதானத்துக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த காலையில், அவருடைய நண்பரான நீதிதேவனாகப்பட்டவர் அங்கே வர, இருவரும் சேர்ந்து 'மலையில்லா மலைச்சாலை'க்குச் செல்வாராயினர்.

அங்கே அவர்கள் ஏறிச் சென்ற 'லிப்ட்' இரண்டாவது மாடியை நெருங்கியதுதான் தாமதம். அந்த மாடியின் ரிஸ்ப்ஷனிஸ்டான மதனா விரைந்து வந்து, ‘நில்லுங்கள், நில்லுங்கள்’ என்று சொல்ல, ‘'சொல்லுங்கள், சொல்லுங்கள்?” என்று இருவரும் லிப்டை விட்டு இறங்கி, அவளை நோக்கிச் செல்வாராயினர்.

“எங்கள் விக்கிரமாதித்தருக்கு உள்ளது போல உங்களுக்குத் தயை உண்டா?”