பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

217

விளையாடி, பத்து மணிக்கு நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆக நால்வகை ஜீவராசிகளையும் விதம் விதமாகச் சமைத்துக்கொண்டு வந்து வைக்கச் சொல்லி உட்கார்ந்து, ஒரு பெக் பிஸ்கெட் பிராந்தியோடு அவையனைத்தையும் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு எழுந்து, 'கார் ரெடியா?' என்று அவள் டிரைவரைக் கேட்க, 'ரெடி!’ என்று அவன் சொல்ல, ‘அம்மா, நான் வருகிறேன்!' என்று சொல்லிக்கொண்டே அவள் வாசலுக்கு வருவாளாயினள்.

அதுகாலை அங்கே பேட்டிக்காகக் காத்திருந்த நிருபர் ஒருவர் அவளைக் கண்டதும் எழுந்து நின்று, 'இரவு தூங்கினீர்களா?' என்று கேட்க, 'துங்கினேன்!' என்று அவள் சொல்ல, 'காலை எழுந்தீர்களா?’ என்று அவர் கேட்க, ‘எழுந்தேன்!' என்று அவள் சொல்ல, ‘சாப்பிட்டீர்களா?' என்று அவர் கேட்க, 'சாப்பிட்டேன்!' என்று அவள் சொல்ல ‘என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று அவர் கேட்க, 'வழக்கமாகச் சாப்பிடும் ஒரே ஒரு இட்லியைக்கூட விட்டுவிட்டு இன்று நான் பாதிதான் சாப்பிட்டேன்; பாக்கிப் பாதியை என் அம்மா என்னுடைய தலையைச் சுற்றித் திருஷ்டி கழித்துக் காக்காய்க்குப் போட்டுவிட்டாள்!' என்பதாகத்தானே சொல்லிவிட்டு அவள் காரில் ஏறி உட்கார்ந்து கொள்ள, ‘இன்னொன்றைக் கேட்க மறந்துவிட்டேனே, உங்களுக்கு எப்போது கலியாணம்?’ என்று நிருபர் காருக்குள் தலையை நீட்டிக் கேட்க, 'நடக்கும்போது சொல்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு அவள் வெளியே வர, அதுவரை அவளுக்காக அங்கே காத்திருந்த நட்சத்திரதாசன் திடீரென்று அவள் காருக்கு முன்னால் பாய, ‘இதென்ன சங்கடம்?' என்ன விஷயம்?’ என்று விசாரிக்க, ‘நேற்றிரவு வந்த ரசிகன் நான். கொடுக்கவே கொடுத்தீர்கள் போட்டோ, அதில் ஒரு கையெழுத்தைப் போட்டுக் கொடுக்கக் கூடாதா?’ என்று அவன் தன் கையிலிருந்த போட்டோவை நீட்ட, 'அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பதினாலு